/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஓட்டுனர் தேர்வு தளம் இல்லாததால் லைசென்ஸ் பெறுவதில் சிக்கல்! நிலம் கையகப்படுத்துவதில் சுணக்கம்
/
ஓட்டுனர் தேர்வு தளம் இல்லாததால் லைசென்ஸ் பெறுவதில் சிக்கல்! நிலம் கையகப்படுத்துவதில் சுணக்கம்
ஓட்டுனர் தேர்வு தளம் இல்லாததால் லைசென்ஸ் பெறுவதில் சிக்கல்! நிலம் கையகப்படுத்துவதில் சுணக்கம்
ஓட்டுனர் தேர்வு தளம் இல்லாததால் லைசென்ஸ் பெறுவதில் சிக்கல்! நிலம் கையகப்படுத்துவதில் சுணக்கம்
ADDED : மே 14, 2025 11:53 PM
பெ.நா.பாளையம்: கோவை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லைசென்ஸ் பெறுபவர்கள், அடிப்படை வசதிகள் இல்லாத தனியார் நிலத்தில் வாகனங்களை ஓட்டி காட்டி, லைசென்ஸ் பெற வேண்டிய நிலை உள்ளது.
கோவை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் துடியலூர், வெள்ளக்கிணறு ரோட்டில் ரயில் பாதை அருகே வாடகை கட்டடத்தில், 20 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது.
அடிப்படை வசதிகள் இன்றி இயங்கும் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், லைசென்ஸ் பெறுவதில், வாகன ஓட்டிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. கோவை வடக்கு பகுதியில் நரசிம்மநாயக்கன்பாளையம் வரை வசிப்பவர்கள், வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் விண்ணப்பித்து இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களுக்கான லைசென்ஸ் பெற வேண்டும்.
வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு பல்வேறு பணி நிமித்தமாக வரும் நபர்கள், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை அலுவலகத்துக்கு வெளியே நிறுத்த வேண்டும். அப்பகுதி ரயில்வே லெவல் கிராசிங் உள்ள பகுதி என்பதால், கோவை, மேட்டுப்பாளையம் இடையே இயங்கும் பாசஞ்சர் ரயில், சேரன் காலனி அருகே ரயில்வே லெவல் கிராசிங்கை கடக்கும்போது, அப்பகுதியில் பெரும் வாகன நெரிசல் ஏற்படுகிறது. இதனால் போக்குவரத்து அலுவலகத்துக்கு வரும் நபர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு 'டெஸ்ட் ட்ராக்' எனும் ஓட்டுநர் தேர்வு தளம் தனியாக இருக்க வேண்டும். தினமும் காலையில் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர மற்றும் கனரக வாகனங்களுக்கான ஓட்டுனர் லைசென்ஸ் பெற விரும்புபவர்கள், இங்கு வந்து வாகனத்தை ஓட்டி காண்பிக்க வேண்டும். அந்த தேர்வு தளத்தில் போக்குவரத்து விதிகளுக்கு உட்பட்டு உரிய வசதிகள் செய்யப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், கோவை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுநர் தேர்வு தளம் என அரசால் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
இதனால் வெள்ளக்கிணறு, சரவணம்பட்டி ரோட்டில் தனியாருக்கு சொந்தமான கோவில் அருகே உள்ள நிலத்தில் ஓட்டுநர் தேர்வு தளம் செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும், 50க்கும் குறையாத பொதுமக்கள் லைசென்ஸ் பெற வாகனங்களை ஓட்டி காட்ட வருகின்றனர். இங்குள்ள 'டெஸ்ட் ட்ராக்கில்' மழை பெய்தால், மண் தரையில் வாகனங்களை செலுத்த முடியாமல், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாக நேரிடுகிறது.
இது தவிர, புதிய மற்றும் எப்.சி., வாகனங்களை ஆய்வு செய்யும் பணி வெள்ளக்கிணறு, கணபதி ரோட்டில் தினமும் நடக்கிறது. இதனால் இப்பாதையின் இரண்டு பக்கமும் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. அவற்றை அதிகாரிகள், ஒவ்வொன்றாக ஆய்வு செய்கின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.
இது குறித்து, வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தினர் கூறுகையில்,' சில நாட்களுக்கு முன்பு எஸ்.எஸ். குளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு, பணிகள் துவக்க முடிவு செய்யப்பட்டது.
ஆனால், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், திட்டம் கைவிடப்பட்டது. வேறு இடத்தில் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைக்க, வருவாய் துறையினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது' என்றனர்.

