/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கலெக்டர் சொல்லியும் நடக்கவில்லை வேலை பொறுமைக்கும் எல்லை உண்டு!குடிநீர் தட்டுப்பாடால் தவிக்கும் மக்கள்
/
கலெக்டர் சொல்லியும் நடக்கவில்லை வேலை பொறுமைக்கும் எல்லை உண்டு!குடிநீர் தட்டுப்பாடால் தவிக்கும் மக்கள்
கலெக்டர் சொல்லியும் நடக்கவில்லை வேலை பொறுமைக்கும் எல்லை உண்டு!குடிநீர் தட்டுப்பாடால் தவிக்கும் மக்கள்
கலெக்டர் சொல்லியும் நடக்கவில்லை வேலை பொறுமைக்கும் எல்லை உண்டு!குடிநீர் தட்டுப்பாடால் தவிக்கும் மக்கள்
ADDED : ஜன 26, 2024 12:56 AM
அன்னுார்;'கூட்டு குடிநீர் திட்டப்பணிகளை, டிச., 31க்குள் முடிக்க வேண்டும்' என கலெக்டர் பிறப்பித்த உத்தரவு செயல்படுத்தப்படவில்லை. இதனால், போராட்டம் நடத்தும் நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
அன்னுார், அவிநாசி, சூலுார் ஒன்றியங்களை சேர்ந்த, 708 குடியிருப்புகளுக்கு, பவானி ஆற்று நீர் வினியோகிக்கும் கூட்டு குடிநீர் திட்டம், 256 கோடி ரூபாய் மதிப்பில், நான்காண்டுகளுக்கு முன் துவங்கியது.
இதில், அன்னுார், அவிநாசி, சூலுார் ஒன்றியங்களை சேர்ந்த, 40 ஊராட்சிகள் பயன் பெறும். ஏற்கனவே உள்ள வழியோர கிராமங்களுக்கான கூட்டு குடிநீர் திட்டம், திருப்பூர் முதலாம் குடிநீர் திட்டம் ஆகியவற்றில், மிகக் குறைவான நீரே கிடைப்பதால், துவங்கிய திட்டம் செயல்பாட்டுக்கு வராததால், கிராம மக்கள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
இதுகுறித்து, பொகலுார் ஊராட்சி தலைவர் நடராஜ் மற்றும் மேற்கு பகுதி ஊராட்சி தலைவர்கள் கூறியதாவது:
ஊராட்சிகளில் 2011ல் இருந்த மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டு, குடிநீர் வழங்குகின்றனர். கிராம ஊராட்சியில் ஒரு நபருக்கு, தினமும் 55 லிட்டர் தண்ணீர் வழங்க வேண்டும்.
ஆனால், 25 லிட்டர் மட்டுமே வழங்க முடிகிறது. இதில், அன்னுார் அல்லது மேட்டுப்பாளையத்தில் மின்தடை ஏற்பட்டாலும், குழாய் உடைப்பு ஏற்பட்டாலும் நான்கு நாட்களுக்கு குடிநீர் வருவதில்லை.
வினியோகிக்கும் நீரை துல்லியமாக அளக்க மீட்டர் இல்லை. தோராயமாக கணக்கு சொல்லப்படுகிறது. கடந்த 13 ஆண்டுகளில் பல ஊராட்சிகளில், மக்கள் தொகை 50 சதவீதம் அதிகரித்து விட்டது. ஆனால், முந்தைய ஒதுக்கீடு தண்ணீர் கூட, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் தருவதில்லை.
இதையடுத்து, கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேரடியாக புகார் செய்தோம். கடந்த டிசம்பர் முதல் வாரம், அன்னுார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு கலெக்டர் கிராந்திகுமார் வருகை தந்து, குடிநீர் வடிகால் வாரியத்தின் கோவை செயற்பொறியாளர் மீராவிடம், குடிநீர் தட்டுப்பாடு குறித்து விசாரித்தார்.
வெறும் சமாதானம்
அப்போது அவர், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம், டிச., 31ம் தேதிக்குள் திட்டத்தை முழுமையாக முடித்து அனைத்து ஊராட்சிகளுக்கும் தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் வினியோகிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்; செயற்பொறியாளரும் அதற்கு உறுதியளித்தார். ஊராட்சித் தலைவர்களிடம், ஜன., 2ம் தேதிக்குள் புதிய குடிநீர் திட்டத்தில் குடிநீர் கிடைக்காவிட்டால், ஜன., 5ம் தேதி தன்னை நேரில் வந்து சந்திக்கும்படி அறிவுறுத்தினார்.
கலெக்டர் உத்தரவு பிறப்பித்த கெடு முடிந்து 25 நாட்கள் ஆகிவிட்டது. ஆனால், திட்டத்தை செயல்படுத்துவதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை.
தற்போது இருக்கும் நிலையில் இன்னும் ஆறு மாதங்கள் ஆனாலும், திட்டம் செயல்பாட்டுக்கு வராத நிலை தான் உள்ளது.
பொதுமக்களுக்கு பதில் சொல்ல முடிவதில்லை பெண்கள், முதியோர், நீண்ட தொலைவு சென்று குடிநீர் எடுத்து வர வேண்டியுள்ளது.
குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், வெறும் சமாதானம் மட்டுமே கூறுகின்றனர். மிகக்குறைந்த ஆட்களை வைத்து வேலை செய்து வருகின்றனர்.
அப்படியே உள்ளது
லோக்சபா தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் தான் உள்ளது. எங்கள் ஊராட்சியின் பதவிக்காலம் இன்னும் 11 மாதங்கள் மட்டுமே உள்ளது. அதற்குள், குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் பொதுமக்களுக்கு வழங்க தொடர்ந்து போராடி வருகிறோம். முதல்வரின் தனி பிரிவுக்கு மனு அனுப்பி உள்ளோம். ஆனாலும் திட்டம் முடங்கியே கிடக்கிறது. அரசு விரைவில் இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். ஒரு லட்சத்து 25 ஆயிரம் பேர் குடிநீர் தட்டுப்பாடால் தவிக்கின்றனர்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
இதையடுத்து, வரும் சில நாட்களில், கலெக்டரை சந்திக்க ஊராட்சி தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.

