/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தங்கம்மாள் ஓடை மேம்பாட்டு பணியை எப்ப முடிப்பாங்க! மூன்று ஆண்டுகளாக தொடரும் இழுபறி
/
தங்கம்மாள் ஓடை மேம்பாட்டு பணியை எப்ப முடிப்பாங்க! மூன்று ஆண்டுகளாக தொடரும் இழுபறி
தங்கம்மாள் ஓடை மேம்பாட்டு பணியை எப்ப முடிப்பாங்க! மூன்று ஆண்டுகளாக தொடரும் இழுபறி
தங்கம்மாள் ஓடை மேம்பாட்டு பணியை எப்ப முடிப்பாங்க! மூன்று ஆண்டுகளாக தொடரும் இழுபறி
ADDED : ஜன 19, 2024 12:07 AM

உடுமலை : உடுமலை தங்கம்மாள் ஓடை மேம்பாட்டுப்பணிக்கு, இரு திட்டங்களின் கீழ் நிதி ஒதுக்கியும், மூன்று ஆண்டாக பணி முழுமையடையாமல் இழுபறியாகி வருகிறது.
உடுமலை பகுதியிலுள்ள ஏழு குளங்களின் கசிவு நீர் மற்றும் மழை வெள்ள நீர் ஓடையாகவும், ஒட்டுக்குளத்திலிருந்து, உடுமலை நகரம் வழியாக, ராஜவாய்க்கால் பள்ளத்தில் இணைந்து, உப்பாறு ஓடையுடன் கலக்கிறது.
நகர பகுதியில், தங்கம்மாள் ஓடையை ஆக்கிரமித்து, ஏராளமான வீடுகள் அமைந்திருந்தன.
அதோடு, பொள்ளாச்சி ரோட்டையும், தளி ரோடு, குட்டைத்திடல் பகுதியை இணைக்கும் பிரதான வழித்தடமாகவும் இருந்ததால், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.
இதற்கு தீர்வு காணும் வகையில், 10 ஆண்டுக்கு முன், ஓடையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள் அகற்றப்பட்டன.
தொடர்ந்து, மத்திய அரசு நிதிக்குழு மானியத்திட்டத்தின் கீழ், 48 லட்சம் ரூபாய் செலவில், பொள்ளாச்சி ரோடு சந்திப்பு முதல் தலைகொண்டம்மன் கோவில் வரை, 300 மீட்டர் நீளத்திற்கு ரோடு அகலப்படுத்தும் பணியும், வெள்ள காலங்களில் பாதிப்பு ஏற்படாத வகையில், ஓடை கரையில், வெள்ளத்தடுப்புச்சுவர் கட்டும் பணி துவங்கியது.
பெயரளவுக்கு பணி
ஆனால், முழுமையாக ஓடையின் நீர் வழித்தடம் மீட்கப்படாமல், பெயரளவிற்கு பணி மேற்கொள்ளப்பட்டது. ஓடை அகலம் அதிகமாக இருக்கும் நிலையில், நீர் வழித்தடத்தை குறுக்கியும், நேராக அமைக்காமல் வளைவுகளுடனும் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டது.
அதோடு, ஓடை துார்வாரப்பட்ட மண், ஓடையில் தேங்கியுள்ள மண், பிளாஸ்டிக் கழிவுகளை முழுமையாக அகற்றப்படவில்லை.
பணி முறைகேடு குறித்து, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால்,பணி நிறுத்தப்பட்டது.
மீண்டும், நகராட்சி நுாற்றாண்டு விழா சிறப்பு நிதியின் கீழ், நகர பகுதியிலுள்ள ஓடை வழித்தடம் முழுவதும் தடுப்புச்சுவர் மற்றும் நடை பாதை, ரோடு அகலப்படுத்துதல், ஓடையின் குறுக்கே பாலம், மின் விளக்குகள் என, பல்வேறு மேம்பாட்டுப்பணி மேற்கொள்ள,மேலும், 12.97 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
ஆனால், இரு பணிகளின் கீழ் நிதி ஒதுக்கியும், தங்கம்மாள் ஓடை மேம்பாட்டுப்பணி தொடர்ந்து, இழுபறியாகி வருகிறது. ஒரு சில இடங்களில், வெள்ள தடுப்பு சுவர்கள் மட்டும் கட்டப்பட்டது.
ஆனால், தளம் கான்கிரீட் அமைத்தல், முறையாக கழிவு நீர் வெளியேறும் வகையில், துார்வாரி நில மட்டத்தை சரி செய்தல், ரோடு அகலப்படுத்துதல் மற்றும் ரோடு விரிவாக்கம் பணிகள் மேற்கொள்ளவில்லை.
அரைகுறையாக பணி மேற்கொள்ளப்பட்ட நிலையில், மூன்று ஆண்டாக முழுமையடையாமல், இழுபறியாகி வருகிறது.
திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி, மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து, வெளிப்படையாக தெரிவிக்காத நிலையில், மிகப்பெரிய குளறுபடி நடந்துள்ளது.
போக்குவரத்து நெரிசல்
இதனால், ஓடையின் நீர் வழித்தடம் மறிக்கப்பட்டும், புதர் மண்டியும், பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கியும் காணப்படுகிறது. சாக்கடை கழிவு நீர் தேங்கி, துர்நாற்றம், கொசு உற்பத்தி என சுகாதாரக்கேடு ஏற்படுத்தி வருகிறது.
மேம்பாட்டு பணி முழுமையாக மேற்கொள்ளப்படாததால், மீண்டும் இந்த ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து, போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.
எனவே, தங்கம்மாள் ஓடை மேம்பாட்டு பணிகளை, திட்ட வடிவமைப்பு அடிப்படையில், முழுமையாக மேற்கொள்ள நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

