ADDED : ஜன 23, 2024 05:13 AM

விருத்தாசலம் : விஷம் வைத்து மயில்களை கொன்ற விவசாயியை வனத்துறையினர் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், தொழுதுார் அடுத்த பெரங்கியம் கிராமத்தை சேர்ந்த கணேசன்,40; என்பவரின் நிலத்தில் நேற்று 9 மயில்கள் இறந்து கிடந்தன.
தகவலறிந்த விருத்தாசலம் வனச்சரகர் ரகுவரன் தலைமையில், வனவர் பன்னீர்செல்வம், வனக்காப்பாளர் நவநீத கிருஷ்ணன் ஆகியோர் கொண்ட குழுவினர் விரைந்து சென்று, இறந்து கிடந்த மயில்களை கைப்பற்றி, விசாரணை செய்தனர்.
அதில் கணேசன் தனது நெல் வயலை வன விலங்குகள் சேதப்படுத்துவதை தடுக்க, சோளம் மற்றும் அரிசியில் பூச்சி கொல்லி மருந்து கலந்து வைத்ததும், அதனை தின்ற 9 மயில்கள் இறந்தது தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் வழக்கு பதிந்து, கணேசனை கைது செய்தனர்.
மேலும், இறந்த மயில்களை தொழுதுார் கால்நடை மருத்துவர் சுப்ரமணியன் உடற்கூறாய்வு செய்த பின், வனத்துறை அலுவலக வளாகத்தில் புதைக்கப்பட்டன.

