பழநி: பழநி பகுதியில் உள்ள வணிக நிறுவனங்கள் தடை பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பழநி பகுதியில் தினமும் ஆயிரக்கணக்கான வெளியூர் பக்தர்கள் வருகை புரிகின்றனர். இங்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அதிக அளவில் கடைகளில் பயன்படுத்தப்படுகிறது.
ஓட்டல், டீக்கடை, பலகார கடைகளில் பிளாஸ்டிக் கேரிப்பை, பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் கரண்டிகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித தட்டுக்கள் , பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித கப்புகள், பார்சல் செய்ய பிளாஸ்டிக் கவர் உபயோகப்படுத்தப்படுகிறது.
இதை தவிர்க்க நகரில் நுழையும் சாலைகளில் சோதனை சாவடிகள் அமைத்து பயணிகள் கொண்டுவரும் பிளாஸ்டிக்கை பறிமுதல் செய்து அப்புறப்படுத்த வேண்டும்.
இதோடு கடைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களில் சம்பந்தப்பட்ட துறையினர் சோதனை நடத்தி தடை பொருட்களை பறிமுதல் செய்து பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நகராட்சி துணைத் தலைவர் கந்தசாமி கூறியதாவது: தடை பிளாஸ்டிக் விற்பனைக்கு முழு தடை தேவை. குடும்ப அட்டைதாரர்களுக்கு மஞ்சப்பை இலவசமாக வழங்க வேண்டும்.
குப்பை பிரிக்க தகுந்த உபகரணங்கள் வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளுக்கு குப்பை கொட்டும் இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். பிளாஸ்டிக் குப்பையை எரிப்பதை தடுக்க வேண்டும்.
குப்பையில் கிடக்கும் பிளாஸ்டிக்கை கால்நடைகள் தின்று உடல்நல கேடு ஏற்படுகிறது.
பழநி நகராட்சியில் 40 டன் குப்பை தினமும் சேகரமாகின்றன. இவற்றை பிரிக்க போதுமான ஊழியர்கள் இல்லை. எனவே திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்த வேண்டும் என்றார்.

