/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சென்னிமலையில் வனத்துறை அறிவிப்பை மீறி குரங்குகளுக்கு மாம்பழம் தந்தவருக்கு அபராதம்
/
சென்னிமலையில் வனத்துறை அறிவிப்பை மீறி குரங்குகளுக்கு மாம்பழம் தந்தவருக்கு அபராதம்
சென்னிமலையில் வனத்துறை அறிவிப்பை மீறி குரங்குகளுக்கு மாம்பழம் தந்தவருக்கு அபராதம்
சென்னிமலையில் வனத்துறை அறிவிப்பை மீறி குரங்குகளுக்கு மாம்பழம் தந்தவருக்கு அபராதம்
ADDED : ஜூன் 24, 2025 02:03 AM
சென்னிமலை, சென்னிமலை மலை கோவிலை ஒட்டிய வனப்பகுதியில், ஆயிரக்கணக்கான குரங்குகள் சுற்றி திரிகிறது. இவை அவ்வப்போது வனப்பகுதி வழியே செல்லும் சாலைக்கு வருவது வழக்கம்.
இவற்றுக்கு ரோட்டில் செல்பவர்கள், பழம், பிஸ்கட், பொரி என தங்களுக்கு பிடித்த அல்லது கைவசம் உள்ளதை வழங்கியதால், தங்களின் உணவு பழக்கத்தை மறந்த குரங்குகள், மனிதர்கள் தரும் காரம், இனிப்பு என சுவை கொண்ட உணவுக்கு மாறி, வனத்துக்குள் செல்வதும் குறைந்தது. இதுபோன்ற சுவையுணவு கிடைக்காத சமயங்களில், சென்னிமலை சுற்றியுள்ள வீடுகளில் புகுந்து உணவு பண்டங்களை தின்பதும், எடுத்து செல்வதும் அதிகரித்தது. இந்த குரங்குகளை பிடிக்க, குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்தனர். இதனால் சென்னிமலை வனத்துறையினர், குரங்குகளுக்கு யாரும் உணவு அளிக்கக்கூடாது என அறிவுறுத்தினர். மேலும், ஆங்காங்கே இதுகுறித்த எச்சரிக்கை பலகைகளும் வைத்தனர். இதையும் மீறி சிலர் குரங்குகளுக்கு உணவளித்து வந்தனர். இந்நிலையில் சென்னிமலை-ஊத்துக்குளி ரோட்டில், பழனி ஆண்டவர் கோவில் பகுதியில், சென்னிமலை வனக்காப்பாளர் துரைசாமி, வனத்துறை ஊழியர்கள் நேற்று ரோந்து சென்றனர்.
அப்போது சரக்கு ஆட்டோவில் வந்த ஒரு வாலிபர், மாம்பழங்களை குரங்குகளுக்கு வீசி கொண்டிருந்தார். அவரை வனத்துறையினர் பிடித்து விசாரித்தனர். கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் என்றும், சரக்கு ஆட்டோவில் மாம்பழம் விற்பனை செய்ய வந்ததும், கெட்டுப்போன மாம்பழங்களை குரங்குகளுக்கு கொடுத்ததும் தெரிய வந்தது. வாலிபருக்கு, 1,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.
இதுகுறித்து வனவர் துரைசாமி கூறியதாவது: வன உயிரினங்களுக்கு தேவையான உணவு வனப்பகுதியிலேயே உள்ளது. இதுபோன்று யாரும் உணவளிக்க வேண்டாம். மக்கள் உணவு அளிப்பதால் குரங்குகளின் உணவு பழக்க வழக்கங்கள் நாளடைவில் மாறிவிடும். இவ்வாறு கூறினார்.