/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தொழிலாளிக்கு இழப்பீடு: உயர்நீதிமன்றம் உத்தரவு
/
தொழிலாளிக்கு இழப்பீடு: உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : ஜன 24, 2024 06:10 AM
மதுரை : மதுரையில் வாகன சோதனையின்போது சில போலீசார் பணம் பறித்து மனித உரிமை மீறலில் ஈடுபட்டதற்காக பாதிக்கப்பட்ட தொழிலாளிக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு வழங்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.மதுரை மகபூப்பாளையம் லாசர் தாக்கல் செய்த மனு:
நான் தினக்கூலி தொழிலாளி. 2017 செப்.,24 ல் ரூ.1500 சம்பளத்துடன் டூவீலரில் சென்றேன். ரூ.100 க்கு பெட்ரோல் நிரப்பினேன். மீதம் ரூ.1400 இருந்தது. மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்ட் அருகே மதியம் 2:30 மணிக்கு சென்றபோது சில போலீசார் வாகன சோதனைக்காக மறித்தனர். டூவீலர் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் காண்பித்தேன். ஒரு போலீஸ்காரர் ரூ.1000 லஞ்சம் கேட்டார். நான் ஹெல்மெட் அணிந்திருந்தேன். லஞ்சம் கொடுக்க மறுத்தேன். எனது பாக்கெட்டில் இருந்த ரூ.1400 ஐ, எஸ்.ஐ.,ஒருவர் பறித்தார். தொகையை திருப்பித் தருமாறு கேட்டபோது பொய் வழக்கு பதிந்து சிறையில் அடைப்போம் எனக்கூறி போலீஸ்காரர் மிரட்டல் விடுத்து தாக்குதல் நடத்தினார். இருவரின் செயலானது மனித உரிமை மீறலாகும்.
சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கைகோரி மனித உரிமை கமிஷனில் வழக்கு தொடர்ந்தேன். அது எனக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு 2021 ல் உத்தரவிட்டது. இதுவரை வழங்கவில்லை. வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு லாசர் குறிப்பிட்டார்.நீதிபதி வி.பவானி சுப்பராயன் விசாரித்தார்.
அரசு தரப்பு: இழப்பீடு தொகையை மனுதாரருக்கு வழங்க அவரது வங்கிக் கணக்கு விபரங்களை மதுரை போலீஸ் கமிஷனர் கோரினார். இதுவரை கிடைக்கவில்லை. இவ்வாறு தெரிவித்தது.
நீதிபதி: மனுதாரர் தனது வங்கிக் கணக்கு விபரங்களை போலீஸ் கமிஷனரிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதனடிப்படையில் இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டார்.

