/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பெயர் பலகை வைத்ததில் ஊழல் குற்றச்சாட்டு
/
பெயர் பலகை வைத்ததில் ஊழல் குற்றச்சாட்டு
ADDED : ஜன 19, 2024 12:03 PM
ப.வேலுார்,: ப.வேலுார் டவுன் பஞ்சாயத்து எல்லையில் பெயர் பலகை வைத்ததில் ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் டவுன் பஞ்சாயத்தில், 18 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க.,வை சேர்ந்த லட்சுமி தலைவராகவும், துணைத் தலைவராக ராஜாவும் உள்ளனர். கடந்த, 11ம் தேதி டவுன் பஞ்சாயத்து கூட்டம் நடந்தது.
இதில் ஆறாவது தீர்மானமாக, ப.வேலுார் டவுன் பஞ்சாயத்து எல்லையில், 4 பெயர் பலகை வைத்ததற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில், கிழக்கே மோகனுார் சாலை பொய்யேரி, பொத்தனுார் சாலை பி.எஸ்.என்.எல்., அலுவலகம் அருகே, தெற்கே காவிரி ஆற்று பாலம் அருகே, வடக்கு தாசில்தார் அலுவலகம் அருகில் என, நான்கு இடங்களில் டவுன் பஞ்சாயத்து எல்லை பெயர் பலகை வைத்து கொடுத்த, நாமக்கல் தனியார் நிறுவனத்திற்கு, ஒரு லட்சத்து, 86 ஆயிரத்து, 440 ரூபாய் டவுன் பஞ்சாயத்து பொது நிதியிலிருந்து வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நான்கு இடங்களில் போர்டு உள்ளது என கணக்கு காண்பித்து விட்டு, மூன்று இடங்களில் மட்டுமே பெயர் பலகை வைத்துள்ளனர். பி.எஸ்.என்.எல்., அலுவலகம் அருகே போர்டு இதுவரை வைக்கப்படவில்லை. ஆனால், போர்டு வைத்ததாக தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில்,'கடந்த, 11ம் தேதி நடந்த கூட்டத்தில் பெயர் பலகை வைத்ததற்காக, ஒரு லட்சத்து, 86 ஆயிரத்து 440 ரூபாய் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதனால் அதற்குரிய தொகை வழங்கப்பட மாட்டாது. பெயர் பலகையை ஆய்வு செய்து அதற்குரிய தொகை மட்டுமே வழங்கப்படும்' என்றனர்.
ப.வேலுார் டவுன் பஞ்., துணைத்தலைவர் ராஜா கூறியதாவது:
நாமக்கல் மாவட்டம், ப.வேலுாரில் ஒரு பெயர் பலகை வைக்க, 46 ஆயிரத்து, 500 ரூபாய் செலவு என நான்கு பெயர் பலகைக்கு, ஒரு லட்சத்து, 86 ஆயிரத்து, 440 ரூபாய் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். ஒரு பலகை வைக்க அதிகபட்சமாக, 15 ஆயிரம் ரூபாய் தான் செலவாகும். இதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. நாமக்கல் மாவட்டம் நிர்வாகம், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்துள்ளோம்.
இவ்வாறு கூறினார்.
ப.வேலுார் டவுன் பஞ்சாயத்து தலைவர் லட்சுமி கூறுகையில்,''நான்கு இடங்களில் பெயர் பலகை வைக்க அனுமதி பெறப்பட்டுள்ளது. மூன்று இடங்களில் பெயர் பலகை வைத்துள்ளோம். பி.எஸ்.என்.எல்., அலுவலகம் அருகே பெயர் பலகை இன்னும் வைக்கவில்லை. கூடிய விரைவில் வைக்கப்படும். பெயர் பலகைக்கு உண்டான செலவு தொகை மட்டுமே வைத்துள்ளோம். அதிகப்படியான தொகை வைக்கவில்லை,'' என்றார்.
பெயர் பலகை வைப்பதில் ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

