/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தடையின்றி குடிநீர் சப்ளை :கவுன்சிலர்கள் கோரிக்கை
/
தடையின்றி குடிநீர் சப்ளை :கவுன்சிலர்கள் கோரிக்கை
ADDED : ஜூன் 26, 2024 12:23 AM
கூடலுார்;'கூடலுார் நகராட்சி பகுதியில் தடையின்றி குடிநீர் வழங்கவேண்டும்,' என, மன்ற கூட்டத்தில் வலியுறுத்தினர்.
கூடலுார் நகர் மன்ற கூட்டம் தலைவர் பரிமளா தலைமையில் நேற்று நடந்தது. கமிஷனர் (பொ.,) ஏகராஜ் முன்னிலை வகித்தார்.
கவுன்சிலர் உஸ்மான்: கூடலுார் நகராட்சி பகுதியில் முறையாக குடிநீர் சப்ளை இல்லை.
வெண்ணிலா: மூன்றாவது குடிநீர் திட்டம் குறித்து தெரிவித்தும் அது குறித்து எந்த ஆய்வும் செய்யவில்லை.
துணைத் தலைவர் சிவராஜ்: கழிவு நீர் கால்வாயில் செல்லும் குடிநீர் குழாய்களை மாற்ற வேண்டும்.
ராஜேந்திரன்: குடிநீருக்கு அதிக நிதி ஒதுக்கியும் பணிகள் நிறைவு பெறவில்லை. செம்பாலாவில், குடிநீர் தொட்டி அமைக்கும் பணி, 3 ஆண்டு பணி நிறைவு பெறவில்லை. அனுமதியின்றி குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதால் நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கமிஷனர்: அனைத்து பகுதிகளுக்கும் தடை இன்றி குடிநீர் சப்ளை செய்ய ஊழியர்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். மற்ற புகார்கள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
கவுன்சிலர்கள்: துாய்மை பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. தினமும் குப்பை அகற்ற வேண்டும். குப்பைகளை எடை போடுவதில் முறைகேடு நடந்து வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்ய வேண்டும்.
ராஜேந்திரன், லீலாவாசு: நகராட்சி வரவு செலவு முழுமையாக வழங்குவதில்லை. வரவு செலவு கணக்குகளை முழுமையாக அளிக்க வேண்டும்.
கமிஷனர்: ஆண்டு வரவு செலவு, கொடுக்கப்படும்.
ராஜந்திரன், உஸ்மான், வெண்ணிலா: கடந்த கூட்ட தீர்மானத்தை விட, மினிட் புத்தக கூடுதல் தீர்மானம் பதிவு செய்துள்ளனர். தலைவருக்கு தெரியாமல் இது எப்படி நடந்தது. இது தொடர்பாக கடும் வாக்குவாதம் நடந்தது.
கமிஷனர்: மினிட் புத்தகத்தில் தலைவர் கையெழுத்திட வில்லை. இது குறித்து சம்பந்தப்பட்ட ஊழியரை அழைத்து விளக்கம் கேட்கப்படும்.
தொடர்ந்து, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. துணை தலைவர் சிவராஜ் நன்றி கூறினார்.