கூட்டுறவு தொழிற்சாலைகளில் இலை கொள்முதல் பெரும் சரிவு! செலவினங்களை தாக்கு பிடிக்க முடியாமல் திணறல்
கூட்டுறவு தொழிற்சாலைகளில் இலை கொள்முதல் பெரும் சரிவு! செலவினங்களை தாக்கு பிடிக்க முடியாமல் திணறல்
UPDATED : செப் 08, 2026 06:43 AM
ADDED : செப் 07, 2026 09:04 PM

ஊட்டி: நீலகிரியில் உள்ள கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் வறட்சியின் காரணமாக இலை வரத்து படிப்படியாக குறைந்து வருவதால், தேயிலை உற்பத்திக்கான செலவினங்களை தாக்கு பிடிக்க முடியாமல் தொழிற்சாலை நிர்வாகங்கள் திணறி வருகின்றன.
நீலகிரியில், மஞ்சூர், பிக்கட்டி,எடக்காடு, கிண்ணக்கொரை, கைகாட்டி, இத்தலார், மகாலிங்கா, நஞ்சநாடு, கரும்பாலம், எப்பநாடு, கட்டபெட்டு உட்பட, மாவட்ட முழுவதும், 16 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. 25 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக இருந்து கொண்டு தங்களது தோட்டங்களில் அறுவடை செய்யும் இலையை அந்தந்த பகுதியில் உள்ள கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைக்கு வினியோகித்து வருகின்றனர்.
வறட்சியின் தாக்கம் நடப்பாண்டில், நீலகிரியில் கோடை மழை, 30 செ.மீ; தென்மேற்கு பருவ மழை, 65 செ.மீ., சராசரி அளவாகும். இது வரை, 30 செ.மீ. , அளவு மழை பெய்துள்ளது. மழை பொழிவு அடியோடு குறைந்ததால் தேயிலை விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. பொதுவாக கோடை மழை பரவலாக பெய்யும் பட்சத்தில், இலை வரத்து அதிகரித்து காணப்படும். இம்முறை எதிர்பார்த்த மழை பொழிவு இல்லாததால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது. இதற்கிடையை, 'எல் நினோ தாக்கம் தான் மழை பொழிவு குறைவதற்கு முக்கிய காரணம்,' என , தெரியவந்துள்ளது. இதனால், பல இடங்களில் நீர்நிலைகள் வறண்டு குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. தேயிலை தோட்டங்களுக்கு ஏற்ற சீதோஷ்ண நிலை கிடைக்காமல் மகசூல் படிப்படியாக குறைந்து வருகிறது.
திணறும் தொழிற்சாலைகள் மாவட்டத்தில் உள்ள. கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் தொழிற்சாலைகளின் உற்பத்திக்கு ஏற்றவாறு, தினசரி, 10 ஆயிரம் கிலோவிலிருந்து அதிகபட்சம், 20 ஆயிரம் வரை இலை கொள்முதல் செய்யப்படுகிறது. இந்நிலையில், தற்போது ஏற்பட்ட வறட்சியான காலநிலை காரணமாக, தேயிலை செடிகள் காய்ந்து இலை வரத்து படிப்படியாக குறைய துவங்கியுள்ளது.
இலை கொள்முதல் பெரும்பாலான தொழிற்சாலைகளில் கடந்த சில நாட்களாக தினசரி கொள்முதல், 5 ஆயிரம் கிலோ முதல், 10 ஆயிரம் கிலோ வரை கொள்முதல் செய்யப்படுகிறது. இதில், கிண்ணக்கொரை, எப்பநாடு, இத்தலார், மகாலிங்கா உள்ளிட்ட தொழிற்சாலைகளில், தினசரி கொள்முதல், 5 ஆயிரம் கிலோவாக குறைந்துள்ளது. மூன்று ஷிப்ட் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வந்த தேயிலை உற்பத்தி இரண்டு ஷிப்ட் அடிப்படையில் தேயிலை உற்பத்தி நடந்து வருவதால் தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது.
அதிகாரிகள் கூறுகையில், 'எல் நினோ' பாதிப்பால் ஏற்பட்டுள்ள வறட்சியான காலநிலையால் பசுந்தேயிலை வரத்து அடியோடு குறைந்துள்ளது. தேயிலை உற்பத்தி குறைந்ததால், ஏற்றுமதியும் எதிர்பார்த்த அளவில் இல்லை. தற்போது கொள்முதல் செய்யப்படும் குறைந்தளவிலாக பசுந்தேயிலையை வைத்து தேயிலை உற்பத்தி மேற்கொள்ளப்படுவதால், செலவினங்களை தாக்கு பிடிக்க முடியாமல் தொழிற்சாலை நிர்வாகங்கள் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது,' என்றனர்.
