/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தொழிலாளர் பற்றாக்குறை: மினி டிராக்டரில் உழவு பணி
/
தொழிலாளர் பற்றாக்குறை: மினி டிராக்டரில் உழவு பணி
ADDED : ஜன 18, 2024 10:05 PM

கோத்தகிரி: நீலகிரி மாவட்டத்தில், தொழிலாளர் பற்றாக்குறை அதிகரித்துள்ளதால், விவசாயிகள் மினி டிராக்டரில் உழவுபணியை மேற்கொண்டு வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில், தேயிலை விவசாயம் பிரதானமாக இருந்தாலும், ஓடை மற்றும் நீர் ஆதாரங்களை நம்பி, கேரட், முட்டைகோஸ், முள்ளங்கி, பீட்ரூட், பீன்ஸ் மற்றும் உருளைக்கிழங்கு உள்ளிட்ட மலைக்காய்கறி கணிசமான பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது.
கடந்த காலங்களில், தோட்டங்களை உழுது, பயிரிடுவதற்கு தயார் செய்ய, கூடுமானவரை தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டனர். சமீப காலமாக தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. பணியை மேற்கொள்ள ஆட்களை பிடிப்பது அரிதாகிவிட்டது.
தவிர, கூலி உயர்வு ஒருப்புறம் இருந்தாலும், தொழிலாளர்களால் குறித்த நேரத்தில் பணியை முடிக்க முடியாத நிலை உள்ளது. இதனால், சரியான போகத்தில் காய்கறி பயிரிட முடியாமல் காலத்தாமதம் ஏற்படுகிறது.
இதனை தவிர்க்க, தற்போது மினி டிராக்டர் மூலம், உழுவுப்பணியை மேற்கொள்ள விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பிட்ட நிலப்பரப்பில் உள்ள தோட்டத்தை, 20 தொழிலாளர்கள், இரண்டு நாட்கள் உழவு செய்வதை, மினி டிராக்டர் மூலம், சில மணி நேரங்களிலேயே பணியை முடித்துக்கொள்ள முடியும். இதனால், விவசாயிகளுக்கு செலவினம் குறைவதுடன், நிறைவான பணி விரைவில் முடியும்.
விவசாயிகள் கூறுகையில், 'தோட்டக்கலை துறை மினி டிராக்டர் உட்பட, உழவுக்கு தேவையான இயந்திரங்களை மானிய விலையில் வழங்குவதால், விவசாயிகளுக்கு அனுகூலமாக உள்ளது. இதனால், ஆர்வத்துடன், மினி டிராக்டரில் பணியை மேற்கொள்ள முடிகிறது,' என்றனர்.

