சூலூர்:பட்டணம் எஸ்.பி.ஐ.ஓ.ஏ., பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது.
சூலூர் அடுத்த பட்டணம் எஸ்.பி.ஐ.ஓ.ஏ., பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில், ஐந்தாம் ஆண்டு விளையாட்டு விழா நடந்தது. தாளாளர் முருகேசன் பள்ளியின் கொடியை ஏற்றினார். கல்வி அறக்கட்டளை தலைவர் செந்தில் ரமேஷ் ஒலிம்பிக் தீபத்தையும், செயலர் ஜோசப் ஒலிம்பிக் கொடியை ஏற்றி வைத்தனர்.
பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவ, மாணவியருக்கு, கோவை 4 படைப்பிரிவின், தேசிய மாணவர் விமானப்படை பிரிவு கமாண்டர் பர்குணன் பரிசுகள் வழங்கி பேசுகையில், மனதையும், உடலையும் உறுதி செய்ய வேண்டும் என்றால், அனைவரும் ஏதாவது ஒரு விளையாட்டில் ஈடுபட வேண்டும். செல்போன் பயன்பாட்டில் இருந்து விலகி இருக்க வேண்டும், என்றார்.
கூட்டு உடற்பயிற்சி, கராத்தே, சிலம்பம், என்.சி.சி., மாணவர்கள் பயிற்சி, யோகா உள்ளிட்டவைகளில் மாணவ, மாணவியர் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். முன்னதாக மாணவர் அணிவகுப்பு நடந்தது.
முதல்வர் ஷோபா, முன்னாள் மாணவியும் தேசிய வில்வித்தை சாம்பியன் டீனா துர்கா, உடற்கல்வி ஆசிரியர்கள் ஸ்டெபி லூயிஸ், ராஜேஷ் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பங்கேற்றனர்.

