/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'வீடு கட்ட அனுமதி பெற ஒற்றை சாளர முறை'
/
'வீடு கட்ட அனுமதி பெற ஒற்றை சாளர முறை'
ADDED : பிப் 10, 2024 11:58 PM

ஊட்டி:புதிதாக வீடு கட்டும் பொதுமக்கள் எளிமையாக அனுமதி பெற ஒற்றை சாளர முறை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். என, அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.
ஊட்டி அரசு தமிழக விருந்தினர் மாளிகையில் நீலகிரி மாவட்டத்தில் கட்டட அனுமதி வழங்குவது தொடர்பாக கட்டட துறையினர் பங்கேற்ற ஆய்வு கூட்டம் நடந்தது.
வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சர் முத்துசாமி நிருபர்களிடம் கூறியதாவது:
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட 'மாஸ்டர் பிளான்' திட்டத்தை இன்றைய நடைமுறைக்கேற்ப மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். கட்டுமான துறையை சார்ந்தவர்கள் தெரிவித்த பல்வேறு கோரிக்கைகள் சட்ட விதிமுறைக்கு உட்பட்டு மாற்றுவது குறித்து ஆராயப்படும். புதிதாக வீடு கட்டும் பொதுமக்கள் எளிமையாக அனுமதி பெற ஒற்றை சாளர முறை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
மலை மாவட்டத்தில் அரசு சார்பில் கட்டப்படும் வீடுகளுக்கு தேவைப்படும் கட்டுமானப் பொருட்கள் அனைத்தும் சமவெளி பகுதிகளிலிருந்து எடுத்து வர வேண்டியதால் நேரிடும் கூடுதல் செலவினங்களை கருத்தில் கொண்டு பிற மாவட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை விட 18 சதவீதம் கூடுதல் நிதி ஒதுக்கப்படும். பட்டா தடை அமலில் உள்ள நீலகிரி மாவட்டத்தில் முதல்வரின் சிறப்பு ஒப்புதலுடன் டான்டீ ஊழியர்களுக்கு குடியிருப்புகள் கட்டியதைப்போன்று, பத்திரிகையாளர்களுக்கு கட்டித்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
தொடர்ந்து, தடுப்பு சுவர் இடிந்து விழுந்த விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை அமைச்சர் முத்துசாமி, பார்த்து ஆறுதல் கூறினார். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு அரசின் நிதி உதவி வழங்கினார்.
சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன், எம்.பி., ராஜா, கலெக்டர் அருணா உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

