/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தொழிற்சங்க நிர்வாகிகள் கண்டன ஊர்வலம்
/
தொழிற்சங்க நிர்வாகிகள் கண்டன ஊர்வலம்
ADDED : ஜன 10, 2024 10:41 AM
இடைப்பாடி: அரசு போக்குவரத்து கழகத்தை சேர்ந்த தொழிற்சங்கத்தினர், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை நேற்று தொடங்கினர். இதற்கு ஆதரவாக, அண்ணா தொழிற்சங்க சேலம் மண்டல செயலர் சென்னகேசவன், மண்டல தலைவர் நல்லசிவம், கம்யூ., தொழிற்சங்க மாவட்ட செயலர் கிருஷ்ணமூர்த்தி, இடைப்பாடி கிளை அண்ணா தொழிற்சங்க நிர்வாகி சக்திவேல், பா.ம.க., கம்யூ., தொழிற்சங்க நிர்வாகிகள், ஓய்வு பெற்ற தொழிலாளர்கள், இடைப்பாடியில் கண்டன ஊர்வலம் நடத்தினர். பின், வேலை செய்யும் மற்ற தொழிலாளர்களிடம், வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு கேட்டனர்.
ஆனால் இடைப்பாடி அரசு போக்குவரத்து கிளையில் உள்ள, 72 பஸ்களும் இயக்கப்பட்டதாக கிளை மேலாளர் தமிழரசன் தெரிவித்தார். அதேபோல் சங்ககிரி கிளையில், 50 பஸ்களும் இயக்கப்பட்டதாக, கிளை மேலாளர் சதாசிவம் தெரிவித்தார்.
அதேபோல் மேட்டூர், ஓமலுார், தாரமங்கலம், வாழப்பாடி, ஆத்துார் உள்ளிட்ட பகுதிகளில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னாள் நிர்வாகி 'சஸ்பெண்ட்'
அண்ணா தொழிற்சங்க இடைப்பாடி கிளையின் முன்னாள் தலைவர் திருமுருகன். இவர் கடந்த, 7ல் பணிக்கு சென்றார். மறுநாள் பணிக்கு வரவில்லை. நேற்று போராட்டத்தில் பங்கேற்றார். இதனால் முறையாக பணிக்கு வரவில்லை எனக்கூறி திருமுருகனை, 'சஸ்பெண்ட்' செய்து சேலம் தலைமை அலுவலக பொது மேலாளர் உத்தரவிட்டார். அதன் நகலை, தொழிலாளியிடம் வழங்காமல், இடைப்பாடி கிளை அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டது.

