
சேலம் : சேலத்தில் நேற்று தி.மு.க., இளைஞரணி மாநாட்டு சுடரை முதல்வர் ஸ்டாலினிடம், அமைச்சர் உதயநிதி வழங்கினார்.
சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தில், தி.மு.க., இளைஞரணி, 2வது மாநில மாநாடு இன்று நடக்கிறது. இதற்காக முதல்வர் ஸ்டாலின், மாநாட்டு திடலுக்கு நேற்று மாலை மனைவி துர்காவுடன் வந்தார்.
அங்கு அமைச்சர் உதயநிதி வரவேற்றார். சென்னையில் சில நாட்களுக்கு முன் தொடங்கிய சுடரை, தி.மு.க., இளைஞரணி நிர்வாகிகள், முதல்வர் ஸ்டாலினிடம் கொடுத்தனர்.
தொடர்ந்து, 'நீட்' விலக்கு கோரி இளைஞர் அணி சார்பில் மேற்கொண்ட இருசக்கர வாகன பிரசாரத்தையும் பார்வையிட்டார். பின், 1,500 'ட்ரோன்'கள் மூலம், வானில் நிகழ்த்தப்பட்ட பிரமாண்ட 'ட்ரோன் ஷோ'வை, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி, நேரு உள்ளிட்ட பலரும் கண்டு ரசித்தனர்.
இதில், ஈ.வெ.ரா., உருவம், அண்ணாதுரை, கருணாநிதி, கொடியேந்திய ஸ்டாலின், தமிழ்நாடு பெயர், தமிழ் வெல்லும், மு.க., என்ற கருணாநிதியின் கையெழுத்து, உதயநிதி உருவம், தி.மு.க., இளைஞரணியின், 2வது மாநில மாநாட்டுக்கு அனைவரும் வருக என்ற எழுத்துக்கள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டன.

