ADDED : மார் 25, 2025 09:54 PM
சிவகங்கை : சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் மார்ச் 28 அன்று வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் வேலைவாய்ப்பு வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் இரண்டாம் அல்லது மூன்றாம் வெள்ளிக்கிழமையன்று சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த முகாம் மார்ச் 28 வெள்ளிக்கிழமை காலை 10:30 மணி அளவில் நடைபெறவுள்ளது.
இம்முகாமில், வேலை அளிக்கும் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்து கொள்ளலாம்.
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த வேலை தேடும் இளைஞர்கள் இவ்வாய்ப்பினைப் பயன்படுத்தி தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பினைப் பெறலாம்.
இம்முகாமில் இலவச திறன் பயிற்சிக்கான விண்ணப்பபடிவம், போட்டித் தேர்வுகளுக்கான இலவசப்பயிற்சி வகுப்பில் மாணவர் சேர்க்கை, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்ப படிவம் வழங்கப்படும்.
விருப்பமுள்ளவர்கள் பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை, ஐ.டி.ஐ, டிப்ளமோ படித்த இளைஞர்கள் தங்களது கல்விச்சான்று, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு அடையாள அட்டை, ஆதார் அட்டையுடன் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
இம்முகாமில் பணிவாய்ப்பு பெறுவோருக்கு பதிவு மூப்பு ஏதும் ரத்து செய்யப்பட மாட்டாது என்றார்.