/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நாளை பென்னிகுவிக் பிறந்தநாள் விழா மணிமண்டபத்தில் ஏற்பாடு தீவிரம்
/
நாளை பென்னிகுவிக் பிறந்தநாள் விழா மணிமண்டபத்தில் ஏற்பாடு தீவிரம்
நாளை பென்னிகுவிக் பிறந்தநாள் விழா மணிமண்டபத்தில் ஏற்பாடு தீவிரம்
நாளை பென்னிகுவிக் பிறந்தநாள் விழா மணிமண்டபத்தில் ஏற்பாடு தீவிரம்
ADDED : ஜன 14, 2024 04:30 AM

கூடலுார் : முல்லைப் பெரியாறு அணையை கட்டி தமிழக விவசாயிகளின் இதயத்தில் நீங்கா இடம் ஆங்கிலேய பொறியாளர் பென்னிகுவிக் பிறந்த நாள் விழாவை பொங்கல் விழாவாக நாளை (ஜன.15) லோயர்கேம்ப் பென்னிகுவிக் மணிமண்டபத்தில் கொண்டாட அரசு மற்றும் விவசாயிகள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பென்னிகுவிக் 1841 ஜன.15ல் மஹாராஷ்டிரா புனேயில் பிறந்தார். பொறியியல் பட்டப்படிப்பை முடித்த இவருக்கு முல்லைப் பெரியாறு அணையை கட்டும் பொறுப்பை பிரிட்டிஷ் அரசு வழங்கியது. அதன் அடிப்படையில் அணை கட்ட வேண்டிய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் உள்ள இடத்தை தேர்வு செய்து முல்லையாறும், பெரியாறும் இணையும் இடத்தில் 1885ல் சர்வே முடித்து கட்டுமான பணிகளை துவக்கினார். அணை கட்டுமானம் நடந்த போது 1888ல் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. பல்வேறு நெருக்கடிகளுக்கு பின் அணை கட்டுமான பணியை மேற்கொண்டார். அணை கட்டுவதில் தொடர்ந்து பல்வேறு சிக்கல் ஏற்பட்டதால் கூடுதல் நிதி ஒதுக்க முடியாது என சென்னை ராஜதானி அரசு தெரிவித்தது.
தன் சொத்துக்களை விற்றார்
மனம் தளராத பென்னிகுவிக் கம்பம், பழனிசெட்டிபட்டி, நிலக்கோட்டை, போடி ஜமீன் பகுதி மக்களிடம் கட்டுமான பணிகளுக்காக பணம் வசூலித்தார். லண்டனில் இருந்த ரூ.65 லட்சம் மதிப்புள்ள தன் மனைவியின் வீடு, நகை , தன் சொத்துக்களை விற்று மீண்டும் அணையை கட்ட துவங்கினார். பணிகள் முடிவடைந்து 1895 அக்.10 மாலை 6 மணிக்கு சென்னை கவர்னர் லாடு வென்லாக் அணையை திறந்து வைத்தார். இதன் மூலம் தென் தமிழகத்தில் 2 லட்சத்து 57 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பாசன வசதி பெற்று வருகிறது. மக்களின் குடிநீர் தாகத்தையும் தீர்த்து வைத்துள்ளது.
இவரது பிறந்த நாளான ஜன.15 பொங்கல் விழாவாக தமிழக விவசாயிகள் கொண்டாடி வருகின்றனர். இவருக்காக லோயர்கேம்பில் மணி மண்டபம் கட்டி இவரது பிறந்தநாளை 2019ல் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு அரசு வெகு விமர்சையாக கொண்டாட முடிவு செய்துள்ளது. அனைத்து விவசாய சங்கங்களுக்கும் அழைப்பு விடுத்து கூடுதல் பொங்கல் வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 1911 மார்ச் 9ல் லண்டனில் இறந்த இவர் இன்றும் தமிழக விவசாயிகளின் இதயத்தில் நீங்கா இடம் பெற்றுள்ளார்.

