/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கோரைப்புல் மண்டிக்கிடக்கும் பூண்டி ஏரி ஓடை
/
கோரைப்புல் மண்டிக்கிடக்கும் பூண்டி ஏரி ஓடை
ADDED : ஜன 20, 2024 11:23 PM

திருவாலங்காடு, திருவாலங்காடு ஒன்றியம், அரிசந்திராபுரத்தில் துவங்கி சின்னம்மாபேட்டை, பழையனுார் வழியாக பாயும் ஓடை நீர் மஞ்சாகுப்பம் அருகே கொசஸ்தலையாற்றில் கலந்து பின் பூண்டி நீர்த்தேக்கம் சென்றடைகிறது. இதன் நீளம் 14 கி.மீ., தூரமும், அகலம் 5 முதல் 60 மீட்டரும் உடையது.
பூண்டி ஏரிக்கு மழைக்காலத்தில் ஓடை கால்வாய் வழியாக கிடைக்கும் நீரில் பழையனுார் ஓடை நீர் அதிகம். இந்நிலையில் சின்னம்மாபேட்டை-- பழையனுார் வரையிலான ஓடை கால்வாயில் சுமார் 4 கி.மீ., தூரத்திற்கு கால்வாயை ஆக்கிரமித்து கோரைப்புல் முளைத்துள்ளது.
கடந்த மாதம் பருவமழை பெய்த நிலையில், ஓடையில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. கடந்த காலங்களில் பருவமழை பெய்தாலே ஓடை கால்வாயில் ஆண்டு முழுதும் நீர் தேங்கி இருக்கும் ஆனால் தற்போது மழைக்காலம் முடியும் முன்னே வறண்டு காணப்படுகிறது.
இதற்கு ஓடையில் முளைத்துள்ள கோரைப்புல் செடிகளே காரணம் என விவசாயிகள் புலம்புகின்றனர். மேலும் ஆடு, மாடு உள்ளிட்ட, 500க்கும் மேற்பட்ட கால்நடைகள் இந்த பகுதியில் மேய்ச்சலுக்கு வந்து செல்கின்றன. இந்த கால்நடைகளுக்கு கோடைக்காலத்தில், நீர் பருக இந்த ஓடை நீர் பயன்படுகிறது.
தற்போது மழைக்காலத்திலே நீர் வற்றி உள்ளதால், கோடைக்காலத்தில் கால்நடைகள் நீர் இன்றி மிகுந்த சிரமத்தை அனுபவிக்கும் எனவே, நீர் இருப்பை பாதுகாக்க ஓடை கால்வாய் பகுதியில் முளைத்துள்ள செடிகளை அகற்றி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

