/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வேப்பம்பட்டு ரயில்வே மேம்பால பணி ரூ.20.7 கோடி கூடுதல் நிதி ஒதுக்கீடு தந்தை, இரு மகள்கள் பலியான சம்பவம் எதிரொலி
/
வேப்பம்பட்டு ரயில்வே மேம்பால பணி ரூ.20.7 கோடி கூடுதல் நிதி ஒதுக்கீடு தந்தை, இரு மகள்கள் பலியான சம்பவம் எதிரொலி
வேப்பம்பட்டு ரயில்வே மேம்பால பணி ரூ.20.7 கோடி கூடுதல் நிதி ஒதுக்கீடு தந்தை, இரு மகள்கள் பலியான சம்பவம் எதிரொலி
வேப்பம்பட்டு ரயில்வே மேம்பால பணி ரூ.20.7 கோடி கூடுதல் நிதி ஒதுக்கீடு தந்தை, இரு மகள்கள் பலியான சம்பவம் எதிரொலி
ADDED : ஜன 18, 2024 09:53 PM

திருவள்ளூர்:சென்னை - அரக்கோணம் ரயில்வே மார்க்கத்தில், வேப்பம்பட்டு ரயில் நிலையம், கடவுப்பாதை எண்: 14ல் மூவர் பலியான சம்பவத்திற்கு பின், தமிழக அரசு 20.7 கோடி ரூபாய் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது. விரைவில் பணிகள் துவங்கி ஆறு மாதத்தில் முடிக்க உள்ளதாக நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர்.
சென்னை -- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் வேப்பம்பட்டு உள்ளது. இச்சாலையில் இருந்து பூந்தமல்லி செல்லும் சாலை பிரிந்து செல்கிறது.
கடும் சிரமம்
இப்பகுதியில் வேப்பம்பட்டு ரயில் நிலையம் உள்ளதால், ரயில்வே கடவுப்பாதை எண்: 14 அடிக்கடி மூடப்படுவதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு, 5 கி.மீ., துாரம் வரை சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டது.
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, ரயில்வே நிர்வாகமும், மாநில நெடுஞ்சாலைத் துறையும் இணைந்து வேப்பம்பட்டு ரயில் நிலையம் அருகே மேம்பாலம் அமைக்க, 2008-ம் ஆண்டு முடிவு செய்தன.
அதன்படி, 2009-ம் ஆண்டில் 29.5 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் அமைக்கும் பணியை ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டது.
ஆனால், மாநில நெடுஞ்சாலைத் துறைக்கு உட்பட்ட பகுதியில், மேம்பாலம் தொடங்கும் இடம் மற்றும் முடியும் இடம் வரை தயாரிக்கப்பட்ட வரைபடங்களில், 4-வது வரைபடத்தின்படி, 14.60 கோடி ரூபாய் மதிப்பில், 2011-ம் ஆண்டு மேம்பால பணிகள் துவக்கப்பட்டு, 1 கி.மீ., துாரத்துக்கு மேம்பால பணிகள் நடந்தன.
இடைக்கால தடை
இந்நிலையில், முதல் வரைபடத்தின்படி, ரயில்வே கடவுப்பாதையின் மற்றொரு புறத்தில் மேம்பாலத்தின் இரண்டாம் கட்டப் பணிகளை, 2012-ம் ஆண்டு நெடுஞ்சாலைத் துறையால் துவக்கப்பட்டது.
இதற்கு எதிராக அப்பகுதியினர் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கால், 2013-ம் ஆண்டு மேம்பால பணியை தொடர, சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
இந்த இடைக்கால தடையை, 2021 டிசம்பர் மாதம் அப்பகுதிவாசிகள் வாபஸ் பெற்றதையடுத்து, இடைக்கால தடை சென்னை உயர் நீதிமன்றத்தால் விலக்கி கொள்ளப்பட்டது.
இன்று வரை மேம்பால பணிகள் துவக்கப்படாதது, பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், 2023 நவம்பர் மாதம் வேப்பம்பட்டு ரயில் நிலைய தண்டவாளத்தை கடந்த போது, தந்தை மற்றும் இரண்டு மகள்கள் ரயில் மோதி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து, பாதியில் நிற்கும் மேம்பால பணியை விரைந்து முடிக்க கோரி மறியல் போராட்டத்தில் பகுதிவாசிகள் ஈடுபட்டனர்.
உத்தரவு
திருவள்ளூர் தாசில்தார் சுரேஷ்குமார் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு, மேம்பால பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
இதற்கிடையே வேப்பம்பட்டு ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை பொதுமக்கள் பாதுகாப்பாக கடந்து செல்வதற்கு வசதியாக, ரயில்வே நிர்வாகம் வேப்பம்பட்டு ரயில் நிலையத்தில் மின்சார ரயில்கள் வரும்போது எச்சரிக்கை ஒலி எழுப்ப ஒலிபெருக்கி அமைக்கப்பட்டது.
மேலும், ரயில்கள் வரும்போது பொதுமக்கள் தண்டவாளத்தை கடக்காமல் தடுப்பதற்காக, ரயில்வே போலீசாரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது வேப்பம்பட்டு ரயில் நிலைய மேம்பால பணிகளுக்கு, தமிழக அரசு 20.7 கோடி ரூபாயை கூடுதலாக ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்த மேம்பால பணிகளை ஆறு மாதங்களுக்குள் நிறைவேற்றும் வகையில் பணிகள் துவக்கியுள்ளதாகவும் நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

