/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூர் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணி... மந்தகதி!:நெரிசலுக்கு தீர்வு காண விரைந்து முடிக்க எதிர்பார்ப்பு
/
திருவள்ளூர் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணி... மந்தகதி!:நெரிசலுக்கு தீர்வு காண விரைந்து முடிக்க எதிர்பார்ப்பு
திருவள்ளூர் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணி... மந்தகதி!:நெரிசலுக்கு தீர்வு காண விரைந்து முடிக்க எதிர்பார்ப்பு
திருவள்ளூர் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணி... மந்தகதி!:நெரிசலுக்கு தீர்வு காண விரைந்து முடிக்க எதிர்பார்ப்பு
ADDED : ஜன 18, 2024 09:55 PM

திருவள்ளூர்:திருவள்ளூரில் 33 கோடி ரூபாய் மதிப்பில், புதிதாக கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலைய பணி துவங்கி ஆறு மாதமாகியும், ஆமைவேகத்தில் நடைபெற்று வருகிறது. நகரின் நெரிசலுக்கு தீர்வு காணும் இத்திட்டத்திற்கு, வேகத்தை அதிகரித்து திட்ட காலத்திற்குள் பணியை விரைந்து முடிக்க நகரவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.
சென்னைக்கு அருகில் உள்ள திருவள்ளூர், மாவட்ட தலைநகராக உருவாகி 30 ஆண்டுகளாகிறது. சென்னை - திருப்பதி செல்லும் வழியில் உள்ள திருவள்ளூரில் இருந்து, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, பெரியபாளையம், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி. ஆந்திர மாநிலம் திருப்பதி, காளஹஸ்தி, கர்நாடக மாநிலம் பெங்களூரு போன்ற பல்வேறு பகுதிகளுக்கும், 250க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
ராஜாஜி சாலையில் அரை ஏக்கருக்கும் குறைவான இடத்தில், செயல்பட்டு வரும் பேருந்து நிலையத்தில், ஒரே நேரத்தில் 10 பேருந்துகள் மட்டுமே நிறுத்த முடியும்.
பேருந்து நிலையத்தின் நுழைவு மற்றும் வெளியேறும் வழி குறுகலாக இருப்பதால், பேருந்துகள் வந்து செல்வதில் சிரமும், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.
இதனால், பொதுமக்களும், பயணியரும் நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றனர். இதற்கு தீர்வாக, திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை சாலை, ஐ.சி.எம்.ஆர்., அருகில் உள்ள வேடங்கிநல்லுாரில், 5 ஏக்கர் நிலத்தில், புதிய பேருந்து நிலையம் தேர்வு செய்யப்பட்டு, பல்வேறு பரிசோதனைக்கு பின், 33 கோடி ரூபாய் நிதியை, அரசு ஒதுக்கீடு செய்தது.
இதையடுத்து, பேருந்து நிலைய கட்டுமான பணி, கடந்த ஜூலை மாதம் பூமி பூஜையுடன் துவங்கியது. இப்பணி, 15 மாதத்தில் நிறைவடையும் என, அப்போதைய கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்தார்.
இந்நிலையில், பணி துவங்கி ஆறு மாதமாகியும், பணியில் வேகமின்றி, துாண்கள் மட்டுமே அமைக்கப்பட்டு உள்ளது. மற்ற கட்டுமான பணி துவங்காமல், கிடப்பில் போடப்பட்டுள்ளது.
எனவே, இப்பணியை மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாம் இணைந்து துரிதப்படுத்தினால் தான், திட்டமிட்ட காலத்திற்குள் பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்.
இதை உணர்ந்து, அரசு துறையினர் பணியை விரைவுபடுத்த வேண்டும் என, பொதுமக்கள் மற்றும் பயணியர் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்துதிருவள்ளூர் நகராட்சி அதிகாரி கூறியதாவது:
கடந்த இரண்டு மாதமாக பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக, பணியில் காலதாமதம் ஏற்பட்டது. மழைக்காலத்தில் கட்டுமான பணி நிறுத்தப்பட்டது. தற்போது, மழை நின்று விட்டதால், பேருந்து நிலைய கட்டுமான பணியை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய பேருந்து நிலைய வசதிகள்
� 5,889 ச.மீட்டர் பரப்பளவில் பேருந்து நிலையம் அமையும்
� தரைத்தளம் மற்றும் மாடி என, 2,493 ச.மீட்டர் பரப்பில் பிரதான கட்டடம் அமையும்
� வெளியூர் பேருந்து - 45, நகர பேருந்து - 11 என, மொத்தம் 56 பேருந்துகள் நிறுத்த முடியும்
� 107 கடைகள் இங்கு கட்டப்பட உள்ளன
� 550 இருசக்கர வாகனம், 16 கார்கள் நிறுத்தும் வசதி அமைய உள்ளது.

