/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆடல் வல்லானின் ஆனந்த தாண்டவம் காண்பதற்கு கண் கோடி கேட்டேனே...
/
ஆடல் வல்லானின் ஆனந்த தாண்டவம் காண்பதற்கு கண் கோடி கேட்டேனே...
ஆடல் வல்லானின் ஆனந்த தாண்டவம் காண்பதற்கு கண் கோடி கேட்டேனே...
ஆடல் வல்லானின் ஆனந்த தாண்டவம் காண்பதற்கு கண் கோடி கேட்டேனே...
ADDED : ஜன 19, 2024 04:29 AM

ஆதியும் அந்தமும் இல்லாத அருட்பெருஞ்ஜோதியாக ஸ்ரீநடராஜர், சிவகாமசுந்தரி அம்மனுடன் அருள்பாலிக்கும், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் கனகசபை திருப்பணி நிறைவு பெற்றுள்ளது.
அருள்மழை பொழியும் அவிநாசியில், கருணாம்பிகை அம்மன் உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், கருவறைகளும், பிரகார அமைப்பும் கூடிய ஆதிவடிவங்கள் சோழர்காலத்தில் உருவாக்கப்பட்டவை. காசிக்கிணறும், காலபைரவரும் சிறப்பு வாய்ந்த அமைப்புகள்.
ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அவிநாசிக்கோவிலில், கனகசபை மிகுந்த வேலைப்பாடுகளுடன் அமைந்துள்ளது. ஆதிவடிவ கோவிலில் அமைக்கப்பட்ட கனகசபையை, பிற்காலத்தில் ஆண்ட மன்னர்கள் சற்றே விரிவுபடுத்தியுள்ளனர்.
கருப்பு நிற கருங்கற்களுடன் அமைந்த கனகசபை வாசலில், தென்கிழக்கு பகுதி பிற்காலத்தில், விஜயநகர பேரரசு காலத்தில் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஆதாரமாக வெள்ளை கற்கள் கொண்ட கல் வேலைப்பாடுகளே இன்று நமக்கு காட்சியளிக்கிறது.
எழில்மிகு தோற்றம்
நவரங்க மண்டபத்தின் வடக்கே, வடபுறம் திருமாளிகை பத்தி நிறைவடையும் இடத்தில், உயரமான கனகசபை அமைந்துள்ளது. தரைமட்டத்தில் இருந்து, நான்கடி உயரத்தில் கனகசபை மண்டபம் கம்பீரமாக காட்சியளிக்கிறது. வடகிழக்கு பகுதியில் உள்ள படிக்கட்டுகளில் ஏறிச்சென்றால், கனகசபை மண்டபத்தில் இருந்து, உள்ளே அம்பலத்தில் ஆடிக்கொண்டிருக்கும் ஸ்ரீநடராஜபெருமானையும், சிவகாமசுந்தரி அம்மனையும் தரிசிக்கலாம்.
கனகசபை மண்டப அறையின் மையத்தில், இரண்டரை அடி உயர கல்மேடை அமைந்துள்ளது. அதன்மீது தான், நடராஜ பெருமான் ஆனந்த நடனம் புரிந்த நிலையில் அருள்பாலித்து வருகிறார். அவரை சுற்றிச்சென்று வழிபடும் வகையில், கற்மேடை அமைந்துள்ளது.
கனகசபை மண்டபத்தின் மேற்புறம், அழகிய சித்திர வேலைப்பாடுகளுடன் கூடிய, கருங்கல்லில் வடிவமைத்த ஜன்னல் போன்ற அமைப்பு உள்ளது. பல நுாறு ஆண்டுகளுக்கு முன்னதாகவே, சிற்பிகளின் கலைவண்ணம் இன்றும் எழிலுற காட்சியளிக்கிறது.
இவை தவிர சோழர்காலத்தில் நடப்பட்ட கருங்கல் துாண் வேலைப்பாடு, காண்போரை கட்டிப்போடும் அளவுக்கு மெய்மறக்க செய்யும். ஒவ்வொரு துாண்களின் கீழ்பகுதியில், ஒவ்வொரு புறமும், சிறு சன்னதி போன்ற கல்வேலைப்பாடு அற்புதமாக அமைந்துள்ளது.
32 ஆரங்கள்...
எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக, கனகசபையில் மையத்தில் உள்ள இரண்டு வட்ட வடிவ துாண்கள், 32 ஆரங்களுடன் விரிந்த தாமரை போன்ற வேலைப்பாடுகள் அழகாக அமைந்துள்ளன. ஒவ்வொரு சிவாலயத்திலும், இறைவன் மற்றும் இறைவி எந்த பெயருடன் அருள்பாலித்தாலும், கனசபையில் ஸ்ரீநடராஜப்பெருமான், சிவகாமி அம்மனாக மட்டுமே காட்சி அருள்பாலிக்கின்றனர்.
ஆனந்த நடனமாடும் நடராஜப்பெருமான் அருகே, சிவகாமியம்மன் நளினமாக நின்ற நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கொங்கேழு சிவாலயங்களில் மட்டுமல்ல, காலத்தால் அளவிட முடியாத, அற்புதம் நிகழ்த்திய அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், கனகசபை மிகவும் பழமை வாய்ந்தது.
அருகிலேயே, யாகசாலை மண்டபம், சதா வேதமந்திரங்கள் ஒலிக்கும், அருள் உறையும் பகுதியாக திகழ்கிறது. விரைவில், திருப்பணி நிறைவுற்று, வரும் பிப்., 2 ம் தேதி அவிநாசியப்பர் - கருணாம்பிகை தாயார் கோவில் கும்பாபிேஷகம் பார் போற்றும் வண்ணம் நிகழ உள்ளது.
அதன் தொடர்ச்சியாக, கனகசபை மண்டபத்தில், ஆனந்த நடனம் புரியும் ஸ்ரீநடராஜப் பெருமானையும், சிவகாமசுந்தரி அம்மனையும், 'காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்க ஓதுவார் தமை நன்னெறிக் குய்ப்பதுவேதம் நான்கினும் மெய்ப்பொருளாவதுநாதன் நாமம் நமச்சிவாயவே' என, திருமுறைகளை பாராயணம் செய்து, உள்ளொளி பெருக வழிபட்டு உய்யலாம்!
- நமது நிருபர் -

