/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உயர்கல்வியுடன் வேலைவாய்ப்புக்கு தேர்வு: பிளஸ் 2 மாணவர்கள் எதிர்கொள்ளலாம்
/
உயர்கல்வியுடன் வேலைவாய்ப்புக்கு தேர்வு: பிளஸ் 2 மாணவர்கள் எதிர்கொள்ளலாம்
உயர்கல்வியுடன் வேலைவாய்ப்புக்கு தேர்வு: பிளஸ் 2 மாணவர்கள் எதிர்கொள்ளலாம்
உயர்கல்வியுடன் வேலைவாய்ப்புக்கு தேர்வு: பிளஸ் 2 மாணவர்கள் எதிர்கொள்ளலாம்
ADDED : ஜன 22, 2024 08:40 PM
உடுமலை:'நான் முதல்வன்' திட்டத்தில், உயர்கல்வியுடன் வேலைவாய்ப்பு பெறுவதற்கான தேர்வு நடத்தப்பட்டு வருவதால், அரசுப்பள்ளி பிளஸ் 2 மாணவர்கள் ஆன்லைன் வாயிலாக எதிர்கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குனர் ஜெயக்குமார் கூறியிருப்பதாவது: 'நான் முதல்வன்' திட்டத்தில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகம், எச்.சி.எல்., தொழில்நுட்ப நிறுவனம் வாயிலாக, அரசு, அரசு உதவி பெறும், மெட்ரிக், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் பிளஸ் 2 மாணவர்கள், உயர்கல்வி மற்றும் பயிற்சியுடன் கூடிய பணி வாய்ப்பு வழங்கப்படுகிறது.
கடந்த 2022 - 23ம் கல்வியாண்டில், 75 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், நடப்பு 2023 - 24 கல்வியாண்டில், பிளஸ் 2 அரையாண்டுத் தேர்வில், 75 சதவீத மதிப்பெண் பெற்று, கணிதம் மற்றும் வணிக கணிதத்தில் 60 சதவீதத்துடன் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் இந்த திட்டத்தில் சேர தகுதி பெறுகின்றனர்.
எச்.சி.எல்., டெக் பி.இ.இ., திட்டம் வாயிலாக, ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., உள்பட பல்வேறு பல்கலைக் கழகங்களில் உயர்கல்வி மற்றும் எச்.சி.எல்., நிறுவனத்தில் பயிற்சியுடன் பணி வாய்ப்பு வழங்கப்படுகிறது.
சாப்ட்வேர் டெவலப்பர், அனலிஸ்ட் டிசைன் இன்ஜினியர், டேட்டா இன்ஜினியர், சப்போர்ட் அண்டு பிராசஸ் அசோசியேட் ஆகிய ஐந்து பணி வாய்ப்புகள் வழங்கப்படும்.
இதற்கான தேர்வு எழுதுவதற்கு https://registrations.hcltechbee.com என்கிற இணையதளத்தில், மாணவர்கள் தங்கள் முழு விபரங்களை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்வோருக்கு, விண்ணப்ப எண் இ - மெயிலில் அனுப்பி வைக்கப்படும்.
'நான் முதல்வன்' திட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கான பயிற்சி கட்டணம் முழுவதையும் திறன் மேம்பாட்டு கழகமே வழங்கி விடும். பயிற்சியின்போது, மாதம்தோறும் 10 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.
இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.
கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'சி.பி.எஸ்.சி., மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு தேர்வு நடத்தி முடிக்கப்பட்டது. அவ்வகையில், அரசு உதவி பெறும் மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு, இன்றும், நாளையும் தேர்வு நடைபெறும். மாணவர்கள், தங்கள் அருகாமையில் உள்ள தேர்வு மையங்களில் கலந்து கொள்ளலாம்.
பிளஸ் 2 மாணவர்கள், ஆன்லைனில் விண்ணப்பித்து, தேர்வு எழுதலாம். எனவே,தேர்வு எழுத வரும் மாணவ, மாணவியர் கட்டாயம் மொபைல் போன் கொண்டு வர வேண்டும்,' என்றனர்.

