/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சீசனில் சாகுபடிக்கு மானியம் தேவை! மலைவாழ் மக்கள் எதிர்பார்ப்பு
/
சீசனில் சாகுபடிக்கு மானியம் தேவை! மலைவாழ் மக்கள் எதிர்பார்ப்பு
சீசனில் சாகுபடிக்கு மானியம் தேவை! மலைவாழ் மக்கள் எதிர்பார்ப்பு
சீசனில் சாகுபடிக்கு மானியம் தேவை! மலைவாழ் மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : ஜூன் 19, 2025 07:42 AM

உடுமலை : தென்மேற்கு பருவமழை சீசனில், சிறு தானிய சாகுபடி மேற்கொள்ளும் வகையில், வேளாண்துறை மானிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என, மலைவாழ் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை, அமராவதி வனச்சரகத்தில், இரு மலைத்தொடர்களுக்கு இடையிலுள்ள சமவெளிப்பகுதியில், அங்கு வசிக்கும் மக்கள், தங்கள் உணவிற்காக பல்வேறு சாகுபடிகளை மேற்கொள்கின்றனர்.
குறிப்பாக, நெல், சிறு தானியங்கள், மொச்சை, பீன்ஸ் ஆகிய சாகுபடி மலைவாழ் மக்களால், பரவலாக மேற்கொள்ளப்படுகிறது.விளைபொருட்களை பிற பகுதிகளுக்கு கொண்டு வந்தும் விற்பனை செய்து வந்தனர்.
தொழில்நுட்ப விழிப்புணர்வு இல்லாதது மற்றும் விதை உட்பட இடுபொருட்கள் கிடைக்காததால், சிறு தானிய சாகுபடியை பெரும்பாலான மலைவாழ் மக்கள் கைவிட்டனர்.
குறிப்பாக, குழிப்பட்டி, மாவடப்பு, கோடந்துார் போன்ற மலைவாழ் குடியிருப்புகளில், சாமை, ராகி போன்ற சிறு தானிய சாகுபடிகள் முற்றிலுமாக காணாமல் போனது.
இது குறித்து, சில ஆண்டுகளுக்கு முன் மலைவாழ் மக்கள், விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில், அளித்த மனுக்கள் அடிப்படையில், வேளாண்துறை நடவடிக்கை எடுத்தது.
அப்போது, சிறப்புத்திட்டத்தின் கீழ், குழிப்பட்டி, மாவடப்பு, பூச்சிகொட்டான்பாறை, ஆட்டுமலை, கோடந்துார் ஆகிய மலைவாழ் குடியிருப்புகள் தேர்வு செய்யப்பட்டன. அங்குள்ள மக்களுக்கு, ராகி, சாமை ஆகிய விதைகள் மானியத்தில், வேளாண்துறையால் வழங்கப்பட்டன.
பின்னர், நுண்ணுாட்ட சத்து உட்பட இடுபொருட்களும், தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகளையும் வேளாண்துறையினர் வழங்கினர். இத்திட்டம் ஓராண்டு மட்டும் செயல்படுத்தப்பட்டு, கைவிடப்பட்டது.
தற்போது கோடந்துார் கிராமத்தில் மட்டும், வேளாண்துறை சார்பில் தரிசு நில மேம்பாடு உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. பிற கிராமங்களுக்கு திட்டங்கள் இல்லை.
தென்மேற்கு பருவமழை பெய்து வரும் நிலையில், மழைக்கு பிறகு, தங்கள் குடியிருப்பை ஒட்டிய விளைநிலங்களில், பல்வேறு சாகுபடி மேற்கொள்ள மலைவாழ் மக்கள் ஆர்வமாக உள்ளனர்.
அங்குள்ள சிற்றாறுகளிலும், நிலையான நீர்வரத்து உள்ளது. எனவே, வேளாண்துறையினர் இந்த சீசனில், சிறு தானிய சாகுபடிக்கு தேவையான விதைகள் மற்றும் இடுபொருட்களை மானியத்தில் வழங்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.