/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அமராவதி அணையிலிருந்து நாளை தண்ணீர் திறப்பு; நடப்பாண்டு 95 நாட்கள் உபரி நீர் வெளியேற்றம்
/
அமராவதி அணையிலிருந்து நாளை தண்ணீர் திறப்பு; நடப்பாண்டு 95 நாட்கள் உபரி நீர் வெளியேற்றம்
அமராவதி அணையிலிருந்து நாளை தண்ணீர் திறப்பு; நடப்பாண்டு 95 நாட்கள் உபரி நீர் வெளியேற்றம்
அமராவதி அணையிலிருந்து நாளை தண்ணீர் திறப்பு; நடப்பாண்டு 95 நாட்கள் உபரி நீர் வெளியேற்றம்
ADDED : செப் 17, 2025 09:20 PM

உடுமலை; உடுமலை அமராவதி அணையிலிருந்து, புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பாசனத்திலுள்ள, 47,117 ஏக்கர் நிலங்களுக்கு நாளை முதல் தண்ணீர் திறக்கப்படுகிறது.
உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை வாயிலாக, திருப்பூர், கரூர் மாவட்டத்திலுள்ள, 54 ஆயிரத்து, 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக, கடந்த ஜூன் 16ல் அணை நிரம்பியது.
தொடர்ந்து, கடந்த, 95 நாட்களாக அணையிலிருந்து, ஆறு மற்றும் பிரதான கால்வாய் வாயிலாக, நீர்வரத்தை பொறுத்து, உபரி நீர் திறக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், கடந்த, ஜூன் 7ம் தேதி முதல், பழைய ஆயக்கட்டு, ராஜவாய்க்கால் பாசனத்திலுள்ள, ராமகுளம், கல்லாபுரம் ,குமரலிங்கம், கண்ணாடிபுத்துார், சோழமாதேவி, கணியூர், கடத்துார், காரத்தொழுவு ஆகிய எட்டு வாய்க்கால் பாசனத்திலுள்ள, 7,520 ஏக்கர் நிலங்களுக்கு நீர் திறக்கப்பட்டது.
இப்பகுதிகளில், குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், வரும், அக்., 20ம் தேதி வரை, இந்நிலங்களுக்கு நீர் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பழைய ஆயக்கட்டு பாசனம், அலங்கியம் முதல், கரூர் வரை ஆற்றின் வலது கரை 10 கால்வாய்கள் வாயிலாக பாசன வசதி பெற்று வரும், 21 ஆயிரத்து, 867 ஏக்கர் நிலங்களுக்கு நீர் திறக்க வேண்டும், என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதே போல், புதிய ஆயக்கட்டு பாசனம், அமராவதி பிரதான கால்வாய் வாயிலாக பாசன வசதி பெற்று வரும், 25 ஆயிரத்து, 250 ஏக்கர் நிலங்களுக்கும் நீர் திறக்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.
பாசன பகுதிகளில், நெல், கரும்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி மேற்கொள்ளும் வகையில் நீர் திறக்க வேண்டும், என பழைய, புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.
அதன் அடிப்படையில், நாளை (19ம் தேதி) முதல், பிப்., வரை, 135 நாட்கள், சுழற்சி முறையில் நீர் வழங்கும் வகையில், அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் கூறுகையில்,' அமராவதி அணை உபரி நீர் பாசன நிலங்களுக்கு வழங்கப்பட்டதால், பயிர் சாகுபடிக்கும், நிலைப்பயிர்களுக்கும் பயனுள்ளதாக அமைந்தது. தற்போது, அமராவதி வலது கரை பழைய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் மற்றும் புதிய ஆயக்கட்டு விவசாயிகள் கோரிக்கை அடிப்படையில், நாளை (19 ம் தேதி) மாலை, 4:00 மணி முதல், அமராவதி அணையிலிருந்து நீர் திறக்கப்பட உள்ளது,' என்றனர்.
அணை நிலவரம் அமராவதி அணையில் நேற்று காலை நிலவரப்படி, மொத்தமுள்ள, 90 அடியில், 88.49 அடி நீர்மட்டம் இருந்தது. மொத்த கொள்ளளவான, 4,047 மில்லியன் கன அடியில், 3,910.29 மில்லியன் கனஅடி நீர் இருப்பு இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 265 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையிலிருந்து, 256 கன அடி நீர் வெளியேற்றப்பட்டிருந்தது.

