/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
செஞ்சி மார்க்கெட் கமிட்டி பிரச்னைக்கு தீர்வு எப்போது? விவசாயிகளின் அலைச்சல் தவிர்க்கப்படுமா?
/
செஞ்சி மார்க்கெட் கமிட்டி பிரச்னைக்கு தீர்வு எப்போது? விவசாயிகளின் அலைச்சல் தவிர்க்கப்படுமா?
செஞ்சி மார்க்கெட் கமிட்டி பிரச்னைக்கு தீர்வு எப்போது? விவசாயிகளின் அலைச்சல் தவிர்க்கப்படுமா?
செஞ்சி மார்க்கெட் கமிட்டி பிரச்னைக்கு தீர்வு எப்போது? விவசாயிகளின் அலைச்சல் தவிர்க்கப்படுமா?
ADDED : ஜன 23, 2024 10:36 PM

செஞ்சி,: செஞ்சி மார்க்கெட் கமிட்டியில் 31 ஆயிரம் நெல் மூட்டைகள் குவிந்ததால் 28ம் தேதி வரை நெல் கொண்டுவர வேண்டாம் என மார்க்கெட் கமிட்டி நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர். விவசாயிகளை வீண் அலைச்சலுக்கு உள்ளாக்காமல் இருக்க முன்பதிவு முறையை அறிமுகம் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விழுப்புரம் மாவட்டத்தின் நெற்களஞ்சியமாக உள்ள செஞ்சி, மேல்மலையனுார் பகுதிகளில் சம்பா பருவ அறுவடை தீவிரமாக நடந்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் செஞ்சி மார்க்கெட் கமிட்டிக்கு நெல் வரத்து அதிகரித்துள்ளது.
செஞ்சி மார்க்கெட் கமிட்டியில் மற்ற மார்க்கெட் கமிட்டிகளை விட கூடுதல் விலை கிடைப்பதால் செஞ்சி பகுதி மட்டுமின்றி மதுராந்தகம், வந்தவாசி, சேத்துப்பட்டு, செய்யாறு உள்ளிட்ட பகுதி விவசாயிகளும் நெல் கொண்டு வருகின்றனர்.
கடந்த 22ம் தேதி ஒரே நாளில் 31 ஆயிரம் நெல் மூட்டைகள் விற்பனைக்கு வந்தன. ஏற்கனவே 19ம் தேதி விற்பனைக்கு வந்த 2000 நெல் மூட்டைகள் மார்க்கெட் கமிட்டி உள்ளே இருப்பில் இருந்தது. இவையும் சேர்ந்து 33 ஆயிரம் நெல் மூட்டைகள் சேர்ந்தன.
அதில் 500 விவசாயிகளின் 15 ஆயிரம் நெல் மூட்டைகளுக்கு 22ம் தேதி லாட் வழங்கி கொள்முதல் செய்தனர். இந்த நெல் மூட்டைகளை எடை போட்டு லாரிகளில் ஏற்றும் பணி நேற்று மாலை வரை நீடித்தது.
இதனால் மீதம் உள்ள 527 விவசாயிகளின் நெல் மூட்டைகளுக்கு நேற்று மாலை லாட் வழங்கினர். இந்த நெல் மூட்டைகளுக்கு இன்று ஏலம் நடக்கும். நாளை 25ம் தேதி தைப்பூசம் என்பதாலும், 26ம் தேதி குடியரசு தினமும், அடுத்து சனி, ஞாயிறு வார விடுமுறையும் தொடர்வதால் விவசாயிகள் 28ம் தேதி மாலை 3:00 மணிக்கு பிறகு நெல் கொண்டு வர வேண்டும் என மார்க்கெட் கமிட்டி நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.
இருந்த போதும் நேற்று மாலை 1000 மூட்டைகளுடன் விவசாயிகள் மார்க்கெட் கமிட்டிக்கு வெளியே காத்திருந்தனர்.
செஞ்சி மார்க்கெட் கமிட்டியில் சீசன் நேரத்தில் நெல் கொண்டு வரும் விவசாயிகள் 2 முதல் 4 நாட்கள் வரை காத்திருக்கும் நிலை நீடிக்கிறது. இதனைத் தடுக்க மார்க்கெட் கமிட்டி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து சீசன் துவங்குவதற்கு முன் வியாபாரிகள், தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கூடுதல் தொழிலாளர்களை நியமிக்கவும், மாற்று இடங்களில் தற்காலிகமாக நெல் மூட்டைகளை விவசாயிகள் இறக்கி வைக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும்.
மார்க்கெட் கமிட்டியில் என்ன நிலவரம் என விவசாயிகளுக்கு தெரிவதில்லை. 70 கி.மீ., துாரம் உள்ள செய்யாறு பகுதி விவசாயிகள் நெல் கொண்டு வந்த பின் திருப்பி அனுப்பினால் வீண் அலைச்சலும், கூடுதலாக வண்டி வாடகையும் தர வேண்டும்.
இதனால் திரும்பிச் செல்லாமல் மார்க்கெட் கமிட்டியில் நெல் மூட்டைகளை இறக்கி வைத்து விட்டு பல நாட்கள் காவல் இருக்கின்றனர். இது போன்ற நிலை ஏற்படாமல் இருக்க புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி விவசாயிகள் ஆன்லைனில் மொபைல் போன்கள் மூலம் முன்பதிவு செய்து நெல் கொண்டு வருவதற்கு மார்க்கெட் கமிட்டி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

