/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரேஷனுக்காக 4 கி.மீ., அலையும் மக்கள்: ரோடு காணாத தெருக்கள் கீழ குருணை குளம் மக்களின் அவதி
/
ரேஷனுக்காக 4 கி.மீ., அலையும் மக்கள்: ரோடு காணாத தெருக்கள் கீழ குருணை குளம் மக்களின் அவதி
ரேஷனுக்காக 4 கி.மீ., அலையும் மக்கள்: ரோடு காணாத தெருக்கள் கீழ குருணை குளம் மக்களின் அவதி
ரேஷனுக்காக 4 கி.மீ., அலையும் மக்கள்: ரோடு காணாத தெருக்கள் கீழ குருணை குளம் மக்களின் அவதி
ADDED : பிப் 01, 2024 11:46 PM
அருப்புக்கோட்டை: திருச்சுழி அருகே கீழக்குருணைக்குளம் கிராமத்தில் ரேஷன் கடை இல்லாததால் 4கி.மீ., சுற்றி மீனாட்சிபுரத்தில் சென்று வாங்க வேண்டிய நிலை.,சேதமடைந்த அங்கன்வாடி மையம், ரோடு காணாத தெருக்கள் போன்ற பிரச்னைகளால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது கீழகுருணைகுளம் கிராமம். இதில் 8 க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. பல தெருக்களில் ரோடுகளே இல்லை. மேற்கு தெருவில் முட்புதர்கள் வளர்ந்தும், வாறுகாலின்றி கழிவு நீர் தெருவில் தேங்கியும் நடக்க முடியாத நிலையில் உள்ளது.
கிராமத்தில் பெரும்பாலான விவசாயிகள் வீட்டுக்கு வீடு ஆடுகள், மாடுகள் வளர்த்து வருகின்றனர். கால்நடைகளுக்கு நோய்கள் தாக்குகின்ற போது 11 கி.மீ., தூரத்தில் உள்ள திருச்சுழி கால்நடை மருத்துவமனைக்கு தான் செல்ல வேண்டும். இதனால் உரிய நேரத்தில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் அவை இறந்து விடுவதும் உண்டு. இந்த கிராமத்தில் கால்நடை மருத்துவ மையம் அமைக்க வேண்டும்.
ரேஷன் கடை இல்லாததால் 4 கி.மீ., தள்ளி உள்ள மீனாட்சிபுரத்தில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று தான் பொருட்கள் வாங்க வேண்டி உள்ளது. ஊரில் உள்ள கண்மாய் வழியாக இறங்கி சென்றால் தூரம் குறையும். ஆனால் கண்மாயில் தண்ணீர் தேங்கியுள்ளதால் 4 கி.மீ., சுற்றி சென்று தான் ரேஷன் கடைக்கு செல்ல வேண்டி இருக்கிறது. ஊராட்சி மூலம் கட்டப்பட்டு வரும் பொது கழிப்பறை பணிகள் மந்தகதியில் நடக்கிறது. பொதுமக்கள், மாணவர்களின் பயன்பாட்டிற்காக ஒரு நூலகம் அமைக்க வேண்டும். ஊராட்சி மூலம் குளியலறை கட்டி தரப்பட வேண்டும். ஊருக்கு காலை நேரத்தில் மட்டும்தான் பஸ் வந்து செல்கிறது. வெளியூர்களில் படிக்கும் மாணவர்களின் நலன் கருதி காலை மாலை திருச்சுழி வழியாக கூடுதல் பஸ்கள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இடியும் நிலையில் அங்கன்வாடி மையம்
தங்கவேல், தொழிலாளி: இங்குள்ள அங்கன்வாடி மையம் கட்டி பல ஆண்டுகள் ஆகி விட்டது. சுவர்கள் பெயர்ந்தும், உட்புறம் சேதமடைந்தும் உள்ளன. இங்குள்ள குழந்தைகளின் நலன் கருதி புதிய அங்கன்வாடி மையம் அமைக்க வேண்டும். நாளுக்கு நாள் இதன் உறுதி தன்மை குறைந்து கொண்ட வருகிறது.
சேதமடைந்த கோடுகள்
முருகன், விவசாயி : கீழகுருணை குளத்தில் ஒருசில தெருக்களில் ரோடுகளே இல்லை. ரோடுகள் அமைக்கப்பட்ட 2 தெருக்களில் ஜல்ஜீவன் திட்டத்திற்காக பகிர்மான குழாய் அமைக்க தோண்டப்பட்டு அவையும் சேதம் அடைந்து விட்டது. தெருக்கள் ரோடுகள் இன்றி முட் புதர்கள் வளர்ந்தும், வாறுகால் இன்றி கழிவு நீரும் தேங்கி கிடக்கிறது. அனைத்து தெருக்களுக்கும் ரோடுகள், வாறுகால் அமைக்க ஊராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மயானத்தில் தண்ணீர் இல்லை
வீரணன், தனியார் ஊழியர் : கீழ குருணைகுளத்தில் உள்ள ஊராட்சி மயானத்தில் தண்ணீர் வசதி இல்லை. இங்கு போர்வெல் அமைக்கப்பட்டும் அதில் தண்ணீர் வரவில்லை. இதனால் இறுதிச் சடங்குகள் செய்ய வருகின்றவர்களுக்கு தண்ணீர் வசதி இல்லாமல் சிரமமப்பட வேண்டியுள்ளது.
மயானத்தில் தேவையான வசதிகளை செய்ய வேண்டும். பொதுவாக கிராமத்திற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட வேண்டும்.

