ADDED : ஜன 23, 2024 05:18 AM
சென்னை : பொங்கலையொட்டி, ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்த, 1,892 ஆம்னி பஸ்களுக்கு, 36.55லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழக போக்குவரத்து ஆணையரகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பொங்கல் பண்டிகையையொட்டி, ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக வந்த புகாரை அடுத்து, கடந்த 10ம் தேதி முதல் 21ம் தேதி வரை, சிறப்பு குழுக்கள் வாயிலாக சோதனை நடந்தது. மாநிலம் முழுதும், 15,659 ஆம்னி பஸ்களில் சோதனை நடந்ததில், 1,892 பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பஸ் உரிமையாளர்களிடம் இருந்து, 36 லட்சத்து, 55,414 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.
நாகலாந்து, அருணாச்சல் உள்ளிட்ட மாநிலங்களில் பதிவு செய்து, விதிகளுக்கு புறம்பாக தமிழகத்தில் இயங்கி வரும் 1,000 ஆம்னி பஸ்களை, மார்ச், 21க்குள் வரைமுறைப்படுத்தலாம்.
தமிழக அரசுக்கு ஆண்டுதோறும், 40 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது என்பதை கருத்தில் கொண்டு, அரசு எடுக்கும் இந்த வரன்முறைக்கு ஆம்னி பஸ்களின் உரிமையாளர்கள் ஒத்துழைக்க வேண்டும்.
வரும் ஏப்., 1 முதல் பிற மாநிலங்களில் பதிவு செய்து, தமிழகத்தில் இயங்கி வரும் வரன்முறைபடுத்தப்படாத ஆம்னி பஸ்கள் இயக்க அனுமதிக்கப்படாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

