UPDATED : அக் 24, 2025 01:28 PM
ADDED : அக் 24, 2025 09:15 AM

சென்னை: அக்டோபர் 27ல் வங்கக்கடலில் புயல் உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு Montha என பெயரிடப்பட்டு உள்ளது.
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை:தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.
இது, அதற்கு அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு, வடமேற்கு திசையில் தமிழக கடலோர பகுதியை நோக்கி நகர்ந்து, மேலும் வலுவடையக் கூடும். அக் 27ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும். இந்த புயலுக்கு Montha என பெயரிடப்பட்டு உள்ளது. இந்த பெயரை தாய்லாந்து நாடு பரிந்துரைத்துள்ளது.
தமிழகத்தில் சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அக்., 29 வரை மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது. கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய 6 மாவட்டங்களில் இன்று (அக் 24) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் ஆகிய 3 மாவட்டங்களில் நாளை (அக் 25) கனமழை பெய்யக்கூடும். விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிப்புரம், ராணிப்பேட்டை, சென்னை, திருவள்ளூர் ஆகிய 6 மாவட்டங்களில் நாளை மறுநாள் (அக் 26) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
அக் 27ம் தேதி மிக கனமழை (ஆரஞ்சு அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* திருவள்ளூர்
* சென்னை
* ராணிப்பேட்டை
அதேபோல், வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அக்டோபர் 28ம் தேதி திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய 2 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

