அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை புதுப்பிக்காததால் மூடப்படும் அவலம்
அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை புதுப்பிக்காததால் மூடப்படும் அவலம்
ADDED : ஜன 21, 2024 07:16 AM

உடுமலை : திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை, 1960ல் துவக்கப்பட்டது. இந்த ஆலையில், கோவை, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள, 18,500 விவசாயிகள் அங்கத்தினர்களாக உள்ளனர்.
ஆண்டுக்கு, 10 மாதங்கள் இயங்கி, 4.5 லட்சம் டன் வரை கரும்பு அரவை செய்யப்பட்டு வந்தது.
இங்குள்ள இயந்திரங்கள் நிறுவி, 64 ஆண்டுகளான நிலையில், பெரும்பாலும் தேய்மானம் அடைந்தும், அரவை திறன் குறைந்து, சர்க்கரை உற்பத்தி பாதிக்கிறது.
இதனால், அரசுக்கும், விவசாயிகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. ஆலை இயந்திரங்களை புதுப்பிக்க, விவசாயிகள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர்.
கடந்தாண்டு, கரும்பு அரவை முழுமையாக மேற்கொள்ள முடியாத நிலையில், தனியார் ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
வழக்கமாக, மார்ச் மாதத்தில், பாய்லர் இளஞ்சூடு ஏற்றப்பட்டு, ஏப்.,1 முதல் கரும்பு அரவை துவங்கும். நடப்பாண்டு, 1,500 ஏக்கர் பதிவு செய்யப்பட்டு, 60,000 டன் கரும்பு அரவை செய்ய திட்டமிடப்பட்டு இருந்தது.
இந்நிலையில், இயந்திரங்கள் பழுது, பராமரிப்பில் சிக்கல் உள்ளிட்ட காரணங்களால், ஆலையை இயக்க முடியாத சூழல் உள்ளதாக, அதிகாரிகள் தரப்பில் அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளனர்.
ஆலையை முழுமையாக நவீனப்படுத்த, 56 கோடி ரூபாய் தேவை என, அரசுக்கு கருத்துரு அனுப்பி வைத்தும், நிதி ஒதுக்கவில்லை. அரசின் அலட்சியத்தால், ஆலை மூடப்படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், மூன்று மாவட்ட கரும்பு விவசாயிகள், தொழிலாளர்கள், கரும்பு வெட்டு ஆட்கள், வாகன டிரைவர்கள் என நேரடியாகவும், மறைமுகமாகவும், ஒரு லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு பயிரிடுவோர் சங்கம் மற்றும் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் முதல்வருக்கு இது தொடர்பாக மனு அனுப்பி உள்ளனர்.

