கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலுக்கு பூம்புகார் நிறுவனம் ரூ.2.32 கோடி வாடகை பாக்கி
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலுக்கு பூம்புகார் நிறுவனம் ரூ.2.32 கோடி வாடகை பாக்கி
ADDED : பிப் 01, 2024 11:28 PM
மதுரை : கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலுக்கு பூம்புகார் நிறுவனம் அளிக்க வேண்டிய ரூ. 2.32 கோடி வாடகை பாக்கியை வசூலிக்க நடவடிக்கை எடுக்காத ஹிந்து அறிநிலைய துறை கமிஷனர், கலெக்டர் மீது தாக்கல் செய்யப்பட்ட அவமதிப்பு வழக்கில், வாடகை பாக்கியின் தற்போதை நிலை குறித்து தமிழக அரசு தகவல் தெரிவிக்க உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டது.
திருத்தொண்டர் சபை ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனு: கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலுக்கு சொந்தமாக 12,431 சதுர அடி காலி மனையை பூம்புகார் கப்பல் கழகத்திற்கு 1984ல் வாடகைக்கு வழங்கப்பட்டது. கடந்த 1.1.2018 வரை ரூ.2.32 கோடி வரை வாடகை செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளது. எனவே, நிலுவை வாடகையை உரிய வட்டியுடன் வசூலிக்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இம்மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிமன்றம், அறநிலையத்துறை கமிஷனர், கன்னியாகுமரி கலெக்டர் ஆகியோர் பூம்புகார் கப்பல் கழக வாடகை பாக்கியை அதன் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநரிடம் வசூலிக்க தேவையான நடவடிக்கை எடுக்க 2022ல் உத்தரவிட்டது.
ஆனால் இதுவரை வாடகை வசூலிக்க நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றாத அதிகாரியின் மீது நடவடிக்கை எடுக்க கோரி ராதாகிருஷ்ணன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கு நீதிபதி புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் ராதாகிருஷ்ணன் ஆஜராகி 'கோயிலுக்கு வரவேண்டிய வருவாய் ரூ.2 கோடி வாடகை பாக்கியை வசூலிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை' என தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து 'வாடகை பாக்கி வசூலில் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து தமிழக அரசு தரப்பில் தகவல் தெரிவிக்க வேண்டும்' என உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

