பிற மாநில அரசு நிறுவனங்களுக்கும் மரச்சாமான்களை விற்க 'டான்சி' முடிவு
பிற மாநில அரசு நிறுவனங்களுக்கும் மரச்சாமான்களை விற்க 'டான்சி' முடிவு
ADDED : பிப் 23, 2024 10:16 PM
சென்னை:தமிழக அரசின் 'டான்சி' நிறுவனம், விற்பனையை அதிகரிக்கும் வகையில், பிற மாநில அரசு நிறுவனங்களுக்கும் மரச்சாமானங்களை விற்க முடிவு செய்துஉள்ளது.
தமிழக அரசின் 'டான்சி' எனப்படும் சிறுதொழில் நிறுவனம், மேஜை, நாற்காலி உள்ளிட்ட மரச்சாமான்களை, அரசு துறைகள், பொதுத்துறை நிறுவனங்களுக்கு விற்கிறது.
இதுதவிர, பள்ளி, கல்லுாரிகளுக்கு தேவையான வகுப்பறை சாமான்கள், வீடு மற்றும் அலுவலகங்களில் பயன்படுத்தும் மேஜை, நாற்காலி, பீரோ போன்றவற்றையும் விற்கிறது. அவை அதிக தரத்துடன் காணப்படுவதால், பல ஆண்டுகளுக்கு நீடித்து உழைக்கின்றன.
டான்சி நிறுவனம், சில ஆண்டுகளுக்கு முன் வரை, ஆந்திரா, மஹாராஷ்டிரா, ராஜஸ்தான் மாநிலங்களில் உள்ள பாதுகாப்பு துறை நிறுவனங்கள் மற்றும் 'இஸ்ரோ' எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்திற்கு, பல்வேறு உபகரணங்களையும் விற்பனை செய்தது.
பின், தமிழகத்தில் உள்ள அரசு நிறுவனங்களுக்கு மட்டும் மரச்சாமான்களை விற்கிறது.
தற்போது விற்பனையை அதிகரிக்கும் நடவடிக்கையில் டான்சி நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இதற்காக, பிற மாநிலங்களுக்கும் மரச்சாமான்களை விற்க உள்ளது.
அதன்படி, பிற மாநில அரசுகளின் துறைகள், நிறுவனங்கள் மரச்சாமான்கள் வாங்குவதற்காக கோரும், 'டெண்டரில்' பங்கேற்று ஆணைகளை பெறும் முயற்சியில் டான்சி ஈடுபட்டுள்ளது.

