ADDED : ஜன 22, 2024 11:32 PM

திருப்புவனம் : திருப்புவனத்தில் அதிகாரிகளின் கவனக்குறைவால் மின் பழுதை சரி செய்ய சென்ற ஊழியர் மின்சாரம் தாக்கி உயிழந்தார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் புதுாரைச் சேர்ந்த ஆடியராஜா மகன் மாரிபாண்டி 27. மின்வாரிய கேங்மேனாக இருந்தார். நேற்று காலை நரிக்குடி ரோடு பகுதியில் மின்தடை ஏற்பட்டதால் தனியார் செங்கல் சூளை அருகே உள்ள டிரான்ஸ்பார்மரில் இணைப்பை துண்டித்து விட்டு பழுதை சரி செய்ய மேலே ஏறியுள்ளார். ஆனால் மின்சாரம் தாக்கி துாக்கி வீசப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். மருத்துவர்கள் பரிசோதனையில் உயிரிழந்தது தெரியவந்தது.
மின்வாரிய ஊழியர்கள் கூறியது: திருப்புவனத்தில் கிழக்கு, மேற்கு என இரு பிரிவுகள் உள்ளன. காற்று வீசும் காலங்களில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படும். இதனை தவிர்க்க துணை மின்நிலையத்தில் இருந்து நேரடியாக இணைப்பு கொடுக்கப்படும். நேரடி இணைப்பு கொடுக்கப்பட்டது குறித்து ஊழியரிடம் அறிவுறுத்தியிருக்க வேண்டும், அதிகாரிகள் அதனை செய்யாததால் மின்சாரம் தாக்கி வாலிபர் உயிழந்துள்ளார், என்றனர்.
மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், துணை மின் நிலையத்தில் இருந்து நேரடி இணைப்பு வழங்கப்படவில்லை. குறிப்பிட்ட இடத்தில் லைன் ஜம்பர் இணைப்பு கொடுத்திருக்கின்றனர். யார் செய்தது என விசாரித்து வருகிறோம், என்றனர்.
தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

