ADDED : ஜன 14, 2024 12:44 AM
சென்னை:சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில், மத்திய அரசின் முன்னாள் அதிகாரிக்கு மூன்றாண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை அசோக் நகரில், மத்திய வெளிநாடு வாழ் இந்தியர்கள் நலத்துறையின் குடியுரிமை பாதுகாப்பு அலுவலகம் உள்ளது. வெளிநாடுகளுக்கு சமையல் வேலை உள்பட சிறு பணிகளுக்கு ஆட்களை அனுப்ப, இந்த அலுவலகத்தில் தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்கள் அனுமதி பெற வேண்டும்.
இங்கு, 2007 முதல் 2009 வரை, புலம்பெயர்ந்தோர் பாதுகாவலராக பணிபுரிந்து வந்தவர் ஐ.ஆர்.எஸ்., என்ற இந்திய வருவாய் பணி அதிகாரி சேகர், 56. இவர், குடியுரிமை சான்றுக்கு அனுமதி வழங்க, இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் பெற்று, அத்தொகையை சொத்துக்கள் வாங்க பயன்படுத்தியதாக, 2012ல் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.
சேகருக்கு, தனியார் நிறுவனங்களிடம் இருந்து பணத்தை வசூலிக்க உதவியதாக, தனியார் வேலைவாய்ப்பு ஏஜென்ட் அன்வர் உசேன்,55 என்பவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்கு, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்ற முதன்மை நீதிபதி கே.தனசேகரன் முன் விசாரணைக்கு வந்தது. அமலாக்கத்துறை தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆஜரானார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, 'குடியுரிமை சான்று வழங்க, பல்வேறு தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்களிடம் இருந்து, ஒரு கோடியே 99 லட்சத்து 34,000 ரூபாய் வரை, லஞ்சமாகப் பணம் பெற்றுள்ளனர் என்பதை, தகுந்த ஆவணங்கள், ஆதாரங்களுடன் சந்தேகத்துக்கு இடமின்றி, விசாரணை அமைப்பு நிரூபித்துள்ளது. எனவே, சேகர், அன்வர் உசேன் ஆகியோருக்கு தலா மூன்றாண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. அபராதமாக தலா 5,000 ரூபாய் செலுத்த வேண்டும்' என, தீர்ப்பளித்தார்.

