ராமேஸ்வரம் விமான நிலையம் ஆய்வு செய்ய கடிதம் எழுதுகிறது அரசு
ராமேஸ்வரம் விமான நிலையம் ஆய்வு செய்ய கடிதம் எழுதுகிறது அரசு
ADDED : செப் 26, 2025 03:12 AM
சென்னை:ராமேஸ்வரம் விமான நிலைய திட்டத்திற்காக, அடையாளம் காணப்பட்டுள்ள இடங்களில் சாத்தியக்கூறு ஆய்வு செய்ய, இந்திய விமான நிலையங்களின் ஆணையத்திற்கு கடிதம் எழுதுமாறு, தமிழக அரசை, 'டிட்கோ' எனப்படும் தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், ரமேஸ்வரத்தில் உள்ள ராமநாத சுவாமி கோவில் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு, பிற மாநிலங்கள் மற்றும் நாடுகளை சேர்ந்த பலர் வருகின்றனர். சாலை, ரயில் மார்க்கமாக மட்டுமே ராமேஸ்வரம் செல்ல முடியும் என்பதால், சுற்றுலா பயணியரின் பயண நேரம் அதிகமாகிறது.
எனவே, சுற்றுலா பயணியர் வருகையை அதிகரிப்பதுடன், பொருளாதாரத்தை மேம்படுத்த அம்மாவட்டத்தில், ராமேஸ்வரம் விமான நிலையம் அமைக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக, ராமநாதபுரம் தாலுகாவில் உள்ள தேவிப்பட்டினம், பழங்குளம், கும்பம் ஆகிய இடங்களும்; கீழக்கரை தாலுகாவில் மாணிக்கனேரி, களரி ஆகிய இடங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஒவ்வொரு இடமும் தலா, 500 ஏக்கர் - 700 ஏக்கர் உடையது. இதில், ராமாநாதபுரம் மற்றும் கீழக்கரை தாலுகாவில் தலா ஒன்று என, இரு இடங்களில் ஏதேனும் ஒன்றில் விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
அந்த இடங்களில், விமான நிலையம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வு மேற்கொள்ள, இந்திய விமான நிலையங்களின் ஆணையத்தை அறிவுறுத்துமாறு, தமிழக அரசுக்கு, 'டிட்கோ' நிறுவனம் கடிதம் எழுதியது.
அதன் அடிப்படையில், விமான நிலையங்களின் ஆணைய அதிகாரிகள் ஆய்வு செய்து, பரிந்துரைக்கும் இடத்தில் விமான நிலையம் அமைக்க, மத்திய அரசிடம் அனுமதி கேட்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.