தி.மு.க.,வினர் நடத்தும் பள்ளிகளில் தான் ஹிந்தி திணிப்பே நடக்கிறது * அடித்து கூறும் அண்ணாமலை
தி.மு.க.,வினர் நடத்தும் பள்ளிகளில் தான் ஹிந்தி திணிப்பே நடக்கிறது * அடித்து கூறும் அண்ணாமலை
ADDED : மார் 25, 2025 06:23 PM
சென்னை:''தமிழகத்தில் ஹிந்தி திணிப்பு நடப்பதே, தி.மு.க.,வினர் நடத்தும் தனியார் பள்ளிகளில் தான்,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
தேசியக் கல்விக் கொள்கையில் மும்மொழிக் கொள்கை என்பது, முதல்வர் குடும்பம் உட்பட தி.மு.க.,வினர் நடத்தும் தனியார் பள்ளிகளில் வழங்கப்படும் பல மொழிகள் கற்கும் வாய்ப்பு, அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே தவிர, முதல்வர் ஸ்டாலின் கூறுவது போல ஹிந்தி திணிப்பு அல்ல.
ஹிந்தி திணிப்பு நடப்பதே, தி.மு.க.,வினர் நடத்தும் தனியார் பள்ளிகளில் தான்.
இந்நிலையில், சட்டசபையில், ஹிந்தி திணிப்பு என்று மீண்டும் கூறியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். மும்மொழி கல்வியை ஹிந்தித் திணிப்பு என்று திரித்துக் கூறுவதன் வாயிலாக, பணமிருப்பவர்கள் மட்டும் தான் பல மொழிகள் கற்க வேண்டும் என்ற தி.மு.க.,வின் மறைமுக கொள்கையை, மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறார் அவர்.
இது தவிர, பள்ளி கல்வித் துறையின் மானிய கோரிக்கையில், மொழி வளர்ச்சி என்ற தலைப்பின் கீழ், சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு, கடந்த 2024 -- 25ல் 11 கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளதாகவும், 2025 -- 26 நிதியாண்டிற்கு, 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர, ஏனைய மொழிகள் வளர்ச்சிக்கு கடந்த ஆண்டு 13 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாகவும், இந்த ஆண்டு 14 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
தி.மு.க., அரசு, சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கும், ஏனைய மொழிகள் வளர்ச்சிக்கும் என்ன செலவு செய்து கொண்டிருக்கிறது என்பது குறித்து, மக்களுக்கு முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.