திருச்சி - டில்லி விமான சேவை: செப்டம்பரில் துவக்குது இண்டிகோ
திருச்சி - டில்லி விமான சேவை: செப்டம்பரில் துவக்குது இண்டிகோ
UPDATED : ஜூன் 15, 2025 02:19 AM
ADDED : ஜூன் 14, 2025 07:20 PM

சென்னை:திருச்சியில் இருந்து டில்லிக்கு விமான சேவையை, இண்டிகோ நிறுவனம் செப்டம்பரில் துவங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
திருச்சியில் இருந்து சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட உள்நாட்டு நகரங்களுக்கும், துபாய், சார்ஜா, யாழ்ப்பாணம், பாங்காக் போன்ற சர்வதேச நகரங்களுக்கும், வாராந்திர மற்றும் தினசரி அடிப்படையில் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
எனினும், டில்லிக்கு செல்ல நேரடி விமானங்கள் எதுவும் இயக்கப்படவில்லை. இதனால், வணிகம் மற்றும் பிற காரணத்திற்காக திருச்சியில் இருந்து டில்லி செல்ல நினைப்போர், சென்னை அல்லது பெங்களூரு செல்ல வேண்டிய சூழல் உள்ளது.
இதனால், பயண நேரம் மற்றும் விமான கட்டணம் அதிகமானது. எனவே, திருச்சியில் இருந்து டில்லிக்கு, நேரடி விமானங்களை இயக்க வேண்டும் என்று, பயணியர் மற்றும் எம்.பி., துரை வைகோ உள்ளிட்டோர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இது தொடர்பாக, 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' நிறுவனத்திற்கு துரை வைகோ நேரில் சென்று கோரிக்கை கடிதமும் வழங்கினார்.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் முதலில் சேவையை துவங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இண்டிகோ நிறுவனம் திருச்சி - டில்லி இடையே தினசரி விமானங்களை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
செப்டம்பர், 16 முதல் விமானங்களை இயக்க உள்ளதாக, விமான போக்குவரத்து வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விமான இயக்கங்கள் மற்றும் முன்பதிவு குறித்து அதிகாரப்பூர்வ தகவல்களை goindigo.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.