பார்வையாளர்களுக்கு ஜன. 31 வரை விமான நிலையத்தில் அனுமதி இல்லை
பார்வையாளர்களுக்கு ஜன. 31 வரை விமான நிலையத்தில் அனுமதி இல்லை
ADDED : ஜன 24, 2024 12:15 AM
மதுரை:மதுரை விமான நிலையத்தில் ஜன., 31 வரை பார்வையார்களுக்கு அனுமதி இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாளை மறுநாள் (ஜன. 26) குடியரசு தினவிழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
இதற்காக மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்பேரில் விமான நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மதுரை விமான நிலையத்தில் ஜன.,23 முதல் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
உள்பகுதிகளில் மத்திய தொழில்பாதுகாப்பு படையினர் முழு கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
விமான நிலையத்தினை சுற்றிலும் 24 மணிநேரமும் ரோந்து பணி, வெடிகுண்டு தடுப்பு பிரிவினரும், மோப்பநாய் பிரிவினரும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். சோதனைக்கு பின்னரே பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். பெருங்குடி, சின்ன உடைப்பு உள்ளிட்ட வெளிப்பகுதிகளில் மாநகர போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
விமான நிலையத்திற்குள் செல்ல பார்வையாளர்களுக்கு ஜன., 31 வரை அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

