அமைச்சர் நமச்சிவாயம் 'எக்ஸ்' வலைதள பக்கம் முடக்கம்
அமைச்சர் நமச்சிவாயம் 'எக்ஸ்' வலைதள பக்கம் முடக்கம்
ADDED : ஜன 19, 2024 07:34 AM
புதுச்சேரி: புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் 'எக்ஸ்' சமூக வலைதள பக்கம் முடக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் என்.ஆர்.காங்., - பா.ஜ.,கூட்டணி ஆட்சி நடக்கிறது. பா.ஜ.,வை சேர்ந்த நமச்சிவாயம் உள்துறை அமைச்சராக உள்ளார்.
பேஸ்புக், எக்ஸ்தளம் என சமூக வலைதளங்களில் தனது கருத்துகளையும், தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளையும் பதிவேற்றம் செய்து வந்தார்.
இந்நிலையில் இவரது எக்ஸ் சமூக வலைதள பக்கம் கடந்த 10 நாட்களாக மர்ம நபர்களால் முடக்கப்பட்டது. இதனை மீட்கும் முயற்சியில் சைபர் கிரைம் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், 'உள்துறை அமைச்சர் எக்ஸ்தளம் முடக்கப்பட்டது தொடர்பாக டுவிட்டர் நிறுவனத்திற்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவாரத்திற்குள் சரியாகிவிடும் என டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது' என்றனர்.
மீண்டும் வந்த கவர்னர்
தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசையின் 'எக்ஸ்' இணையதள பக்கம் கடந்த மூன்று நாட்களுக்கு முன் முடக்கப்பட்டது. இதனை தெலுங்கான சைபர் கிரைம் போலீசார், இந்திய சைபர் ஒருங்கிணைப்பு மையம் உதவியுடன் மீட்டனர். அதனைத் தொடர்ந்து கவர்னர் தமிழிசை நேற்று மீண்டும் 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டார்.
அதில், கடந்த மூன்று நாட்களாக எனது கணக்கினை 'எக்ஸ்' தளத்தில் அணுக முடியவில்லை. அதனை பாதுகாப்பாக மீட்ட தெலுங்கானா சைபர் கிரைம் போலீசார், இந்திய சைபர் ஒருங்கிணைப்பு மையத்திற்கு நன்றி தெரிவித்துகொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

