புதிய தலைமைச் செயலகம் கட்டுமான வழக்கில் அ.தி.மு.க., பிரமுகரை இணைக்க ஆட்சேபனை
புதிய தலைமைச் செயலகம் கட்டுமான வழக்கில் அ.தி.மு.க., பிரமுகரை இணைக்க ஆட்சேபனை
ADDED : ஜன 24, 2024 01:55 AM
சென்னை:புதிய தலைமை செயலகம் கட்டுமானம் தொடர்பான புகாரில், அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில், அ.தி.மு.க., முன்னாள் எம்.பி.,யை இணைப்பதற்கு, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தரப்பில், உயர் நீதிமன்றத்தில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது.
தி.மு.க., ஆட்சியின் போது, சென்னை ஓமந்துாரார் அரசினர் தோட்டத்தில், புதிய தலைமை செயலகம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது. 2011ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, புதிய தலைமை செயலகம் கட்டுமானத்தில் முறைகேடு நடந்ததாகவும், அதுகுறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ரகுபதி தலைமையில் ஆணையம் அமைத்தும், அரசு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் ஸ்டாலின், துரை முருகன் வழக்கு தொடர்ந்தனர்.
ஆவணங்கள், சேகரித்த தகவல்கள் மற்றும் ஆதாரங்களையும் பரிசீலித்து, ஆரம்ப முகாந்திரம் இருந்தால், சம்பந்தப்பட்டோருக்கு எதிராக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, விரிவான விசாரணை நடத்த, தமிழக அரசு அனுமதி அளித்தது.
அதை எதிர்த்து, ஸ்டாலின், துரைமுருகன் தொடர்ந்த வழக்கை உயர் நீதிமன்றம் ஏற்று, அரசின் உத்தரவை ரத்து செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து, அரசு மேல்முறையீடு செய்தது. நிலுவையில் உள்ள இந்த வழக்கில், தன்னையும் சேர்க்க கோரி, அ.தி.மு.க., முன்னாள் எம்.பி., ஜெயவர்த்தன் மனுத் தாக்கல் செய்தார்.
இம்மனு, நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், குமரேஷ் பாபு அடங்கிய அமர்வில், வழக்கு விசாரணைக்கு வந்தது. லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில், தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா ஆஜராகி, சீலிட்ட உறையில் அறிக்கை தாக்கல் செய்தார்.
ஜெயவர்த்தன் சார்பில், மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி ஆஜராகி, ''உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெற, அரசு ஆர்வம் காட்டுகிறது. எங்கள் தரப்பு விளக்கத்தை கேட்ட பின்னே, அதுகுறித்து முடிவெடுக்க வேண்டும்,'' என்றார். தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தரப்பில், மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி, ''இந்த வழக்கில் ஜெயவர்த்தன் தரப்பு விளக்கத்தை கேட்க வேண்டிய அவசியம் இல்லை.
வழக்கை வாபஸ் பெற அரசு முடிவெடுத்த நிலையில், அதை ஏற்காமல் தாமதம் செய்ய முடியாது,'' என்றார்.
அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, ''ஆணையத்தை கலைத்து, உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அரசு ஏற்றுள்ளது. மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெறவும் முடிவெடுத்துள்ளது.
இந்த வழக்கில் தன்னை இணைத்துக் கொள்ள கோருவதற்கு, ஜெயவர்த்தனுக்கு அடிப்படை முகாந்திரம் இல்லை,'' என்றார்.
இதையடுத்து, விசாரணையை, பிப்.,1க்கு தள்ளி வைத்து, வழக்கில் இணைத்துக் கொள்ள கோரிய ஜெயவர்த்தன் மனு குறித்து, அனைத்து தரப்பும் வாதங்களை முன்வைக்கும்படி, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

