தொழிலக பாதுகாப்பு இயக்குனர் பதவி: விதிகளை பின்பற்றி நியமிக்க உத்தரவு
தொழிலக பாதுகாப்பு இயக்குனர் பதவி: விதிகளை பின்பற்றி நியமிக்க உத்தரவு
ADDED : ஜன 14, 2024 01:50 AM

சென்னை: தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனர் பதவிக்கு தகுதியான நபரை, விதிகளை பின்பற்றி ஆறு வாரங்களில் நியமிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கிண்டி சிப்காட் தொழிற்பேட்டையில், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனரகம் உள்ளது. இதன் இயக்குனராக, 2020ல், எம்.வி.செந்தில்குமார் என்பவர் நியமிக்கப் பட்டார்.
வழக்கு
இதை எதிர்த்து, தொழிலக பாதுகாப்பு கூடுதல் இயக்குனர் ஆர்.ராஜசேகரன், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
செந்தில்குமாரை விட தான் மூத்தவர் என்றும், இயக்குனர் பதவிக்கு தன்னை பரிசீலிக்கும்படியும், ராஜசேகரன் கோரியிருந்தார்.
மனுவை விசாரித்த தனி நீதிபதி, செந்தில்குமார் நியமனத்தை ரத்து செய்து, அதிகாரிகளின் தகுதியை ஆய்வு செய்ய, நியாயமான நடைமுறையை ஏற்படுத்தும்படி அரசுக்கு உத்தரவிட்டார்.
முறைப்படி தேர்வு நடந்து நியமிக்கும் வரை, ராஜசேகரனை பொறுப்பு இயக்குனராக நியமிக்கவும் உத்தரவிட்டார்.
தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, தமிழக அரசும், கூடுதல் இயக்குனர் செந்தில்குமாரும் மேல்முறையீடு செய்தனர்.
இம்மனுக்கள், நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபிக் அடங்கிய அமர்வில், விசாரணைக்கு வந்தன.
அரசு தரப்பில், மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், ராஜசேகரன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆர்.சிங்காரவேலன், வழக்கறிஞர் வி.ரவிகுமார் ஆஜராகினர்.
சரியல்ல
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனரை நியமிக்க மேற்கொண்ட நடைமுறை சரியல்ல என, தனி நீதிபதி சரியாக தெரிவித்துள்ளார். அந்த உத்தரவில் குறுக்கிட தேவையில்லை.
அதேநேரத்தில், பொறுப்பு இயக்குனராக ராஜசேகரனை நியமித்த உத்தரவில் மாற்றம் செய்து, செந்தில்குமாரை பொறுப்பு இயக்குனராக நியமித்து, 2021 ஏப்ரலில் இடைக்கால உத்தரவிடப்பட்டுள்ளது.
முறையான தேர்வு நடக்கும் வரை, இந்த இடைக்கால உத்தரவுக்கு எந்த இடையூறும் தேவையில்லை. எனவே, உரிய விதிகளை பின்பற்றி, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனர் பதவியை, அரசு நிரப்ப வேண்டும். ஆறு வாரங்களில் அதற்கான நடவடிக்கையை முடிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

