டில்லி சந்திப்பு தி.மு.க.,வுக்கு நெருக்கடி தர பழனிசாமி அழுத்தம்: உரிய நேரத்தில் நடவடிக்கை என அமித் ஷா பதில்
டில்லி சந்திப்பு தி.மு.க.,வுக்கு நெருக்கடி தர பழனிசாமி அழுத்தம்: உரிய நேரத்தில் நடவடிக்கை என அமித் ஷா பதில்
UPDATED : செப் 18, 2025 10:10 AM
ADDED : செப் 18, 2025 02:18 AM

சென்னை: 'கடந்த 2021 சட்டசபை தேர்தலில் செய்த தவறையே செய்யாமல், வரும் 2026ல் வலுவான கூட்டணி அமைக்க வேண்டும்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியிடம், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
டில்லி சென்ற பழனிசாமி நேற்று முன்தினம் இரவு அமித் ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது, பழனிசாமி மற்றும் அ.தி.மு.க., முக்கிய நிர்வாகிகளுடன், 30 நிமிடங்கள் தமிழகத்தின் பொதுவான அரசியல் நிலவரங்கள், விஜய் கட்சியின் தாக்கம், கூட்டணியை வலுப்படுத்துவது, பிரசார வியூகம் உள்ளிட்ட விஷயங்கள் பற்றி அமித் ஷா பேசியுள்ளார்.
'துரைமுருகன், நேரு, பன்னீர்செல்வம் உள்ளிட்ட தி.மு.க., அமைச்சர்கள், பொன்முடி, செந்தில் பாலாஜி போன்ற முன்னாள் அமைச்சர்கள் மீதான அமலாக்கத்துறை சோதனைகளை விரைவுப்படுத்த வேண்டும்; நீதிமன்றங்கள் ஏற்கும் அளவுக்கு வலுவான ஆதாரங்களை திரட்ட வேண்டும்; டாஸ்மாக் ஊழல் வழக்கில் விசாரணை தடையை நீக்க தேவையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
'மணல் கொள்ளை உள்ளிட்ட வழக்குகளின் விசாரணையை வேகப்படுத்த வேண்டும்.
கடந்த 2024 லோக்சபா தேர்தலின்போது, ஊழல் வழக்குகளில் சிக்கிய ஆம் ஆத்மி கட்சியினருக்கு கொடுத்தது போல நெருக்கடி கொடுக்க வேண்டும்' என, அமித் ஷாவிடம் பழனிசாமி வலியுறுத்தி கூறியுள்ளார்.
அனைத்தையும் பொறுமையாக கேட்டுக் கொண்ட அமித் ஷா, 'வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வை வீழ்த்த வேண்டும்; இல்லையெனில், அ.தி.மு.க.,வின் எதிர்காலமே பாதிக்கப்படும். அ.தி.மு.க.,வில் யாரை சேர்ப்பது, நீக்குவது என்பது, உங்களின் கட்சி விவகாரம். ஆனால், கட்சி பலமாக இருந்தால் தான் வெற்றி கிடைக்கும் என்ற உண்மையையும் மறந்து விடக்கூடாது' என, கூறியுள்ளார்.
'கடந்த 2021 சட்டசபை தேர்தலின்போது, 'தினகரனின் அ.ம.மு.க.,வுக்கு சில தொகுதிகளை விட்டுக் கொடுங்கள்' என்றோம்; தே.மு.தி.க.,வையும் சேர்க்க வலியுறுத்தினோம். ஆனால், விடாப்பிடியாக மறுத்து விட்டீர்கள். இது நடந்திருந்தால், குறைந்தபட்சம் தி.மு.க., பெரும்பான்மை பெறுவதையாவது தடுத்திருக்கலாம். 2021ல் செய்த தவறுகளை மீண்டும் செய்ய வேண்டாம். தி.மு.க., கூட்டணியை தோற்கடிப்பதே நம் ஒற்றை இலக்காக இருக்க வேண்டும். அதற்கு வலுவான கூட்டணி முக்கியம்' என, பழனிசாமியிடம் அமித் ஷா வலியுறுத்தியதாக தெரிகிறது.
இந்த சந்திப்பின்போது அமித் ஷாவும், பழனிசாமியும் தனியாக, 20 நிமிடங்களுக்கு மேலாக பேசியுள்ளனர். அப்போது தினகரன், பன்னீர்செல்வத்தை அ.தி.மு.க.,வில் மீண்டும் இணைப்பதில் உள்ள சிக்கல்கள் குறித்து, பழனிசாமி எடுத்து கூறியுள்ளார். கூடவே, கட்சியில் தலைமைக்கு எதிராக செயல்படும் செங்கோட்டையன் போன்றவர்களை, கூட்டணி கட்சியான பா.ஜ.,வின் தலைவர்கள் சந்தித்து பேசும்போது, அவரை போலவே பலரும் கட்சித் தலைமைக்கு எதிராக கிளம்புவர். அது, அ.தி.மு.க.,வுக்கு மட்டுமல்ல; கூட்டணிக்கே பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும். எனவே, செங்கோட்டையன் போன்றவர்கள் சந்திப்பை தவிர்க்க வேண்டும்' என பழனிசாமி வலியுறுத்தியதை அமித் ஷா அமைதியாக கேட்டுக் கொண்டதாக, கட்சி வட்டாரங்கள் கூறின.
அமித் ஷாவை சந்தித்தது குறித்து, நேற்று பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவு:
அ.தி.மு.க., தலைமை நிர்வாகிகள், ராஜ்யசபா எம்.பி.,க்களுடன் அமித் ஷாவை சந்தித்து, தேச விடுதலைக்காக பாடுபட்ட முத்துராமலிங்க தேவருக்கு, நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்க வலியுறுத்தி கடிதம் கொடுத்தோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

