100க்கும் மேற்பட்ட கோவில்களில் திருப்பணி: அமைச்சர் சேகர்பாபு
100க்கும் மேற்பட்ட கோவில்களில் திருப்பணி: அமைச்சர் சேகர்பாபு
ADDED : ஜன 13, 2024 11:46 PM
சென்னை:சென்னை நுங்கம்பாக்கம், அறநிலையத்துறை தலைமையகத்தில் நடந்த நிகழ்ச்சியில், 'டெபிட், கிரெடிட் கார்டு'கள் வாயிலாக கட்டண சேவை சீட்டுகள் பெறும் வகையில், 260 கோவில்களுக்கு, 315 கையடக்க கருவிகளை மண்டல இணை கமிஷனர்களிடம் அமைச்சர் சேகர்பாபுவழங்கினார்.
பின், நிருபர்களிடம் கூறியதாவது:
நவீன தொழில்நுட்ப வசதிகளை பக்தர்களின் தேவைக்கும், கோவில் வரவு - செலவுகளை சரியான முறையில் பராமரிப்பதற்காகவும், வேறு சில நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தி வருகிறோம். கடந்தாண்டு, 550 கோவில்களுக்கு, 1,700 கையடக்க கட்டண கருவிகளை வழங்கினோம்.
அதன் வாயிலாக, 210 கோடி ரூபாய் கட்டணம் பெறப்பட்டது. தற்போது, 260 கோவில்களுக்கு, 315 கையடக்க கட்டண கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த ஆட்சியில் இதுவரை, 1,224 கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. இந்தாண்டு இறுதிக்குள், 2,000மாவது கோவிலின் கும்பாபிஷேகம் நடத்தி முடிக்கப்படும்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட தொன்மையான, 717 கோவில்கள் உள்ளன. அவற்றை பாதுகாக்க அரசு மானியமாக, 200 கோடி ரூபாயும், உபயதாரர்கள், 130 கோடி ரூபாயும் வழங்கியுள்ளனர். இதன் வாயிலாக, 100க்கும் மேற்பட்ட கோவில்களில் திருப்பணிகள் நடந்து வருகின்றன. அடுத்த கட்டமாக, 80 கோவில்களில் திருப்பணி மேற்கொள்ளப்படும்.
அறுபடை வீடு ஆன்மிக பயணம், 28ம் தேதி 200 பேருடன் புறப்படுகிறது. அவர்களுடன் மருத்துவக் குழுவினரும் செல்வர். ராமேஸ்வரம்- - காசி பயணத்திற்கான முதல் குழுவில், 60 பேர் பிப்., 1ம் தேதி புறப்படுகின்றனர்.
திருச்செந்துார் முருகன் கோவிலில் நகைகள் தொடர்பாக தணிக்கை அலுவலர்கள், அங்கு தவறுகள் நடந்ததாக தெரிவித்தனர். அவை இந்த ஆட்சியில் நடந்த தவறுகள் இல்லை.
இருப்பினும், அதன்மீது உரிய விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தவறு செய்திருந்தால் தண்டிக்கப்படுவர்.
இவ்வாறு அவர் கூறினார்.

