பசுமை மின் உற்பத்தி நிறுவு திறன் நாட்டில் 3வது இடத்தில் தமிழகம்
பசுமை மின் உற்பத்தி நிறுவு திறன் நாட்டில் 3வது இடத்தில் தமிழகம்
ADDED : ஜன 13, 2024 11:15 PM
சென்னை:நாட்டில் காற்றாலை, சூரியசக்தியை உள்ளடக்கிய பசுமை மின் உற்பத்தி நிறுவு திறனில், 18,957 மெகா வாட் உடன் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது.
மின் தேவையை பூர்த்தி செய்வதில், சுற்றுச்சூழலை பாதிக்காத காற்றாலை, சூரியசக்தி மின்சாரத்தை அதிகம் பயன்படுத்துமாறு, அனைத்து மாநிலங்களையும் மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது.
அதை பின்பற்றி, அனல் மின் உற்பத்தி குறைக்கப்பட்டு, பசுமை மின்சாரத்திற்கு முன்னுரிமை தரப்படுகிறது.
மத்திய புதுப்பிக்கத்தக்க துறை, 2023 டிச., 31ம் தேதி நிலவரப்படி, நாட்டில் உள்ள சூரியசக்தி, காற்றாலை, சிறிய நீர் நிலையங்களின் மின் உற்பத்தி நிறுவு திறன் பட்டியலை வெளியிட்டு உள்ளது.
அதில், 10,429 மெகா வாட் காற்றாலை; 7,360 மெகா வாட் சூரியசக்தி; 123 மெகா வாட் சிறிய நீர் நிலையம்; 1,045 மெகா வாட் சர்க்கரை ஆலை உட்பட, ஒட்டு மொத்தமாக பசுமை மின்சார நிறுவு திறன், 18,957 மெகா வாட் உடன், தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது.
ராஜஸ்தான், 24,120 மெகா வாட் நிறுவு திறனுடன் முதலிடத்தில் உள்ளது. குஜராத், 21,977 மெகா வாட் நிறுவு திறனுடன் இரண்டாவதாக உள்ளது.
கர்நாடகா, நான்காவது இடத்திலும், மஹாராஷ்டிரா ஐந்தாவது இடத்திலும் உள்ளன.
நாடு முழுதும் காற்றாலை, 44,736 மெகா வாட்; சூரியசக்தி, 73,318 மெகா வாட்; சிறிய நீர் மின் நிலையம், 4,987 மெகா வாட் என, மொத்தம் 1.34 லட்சம் மெகா வாட் நிறுவு திறன் உள்ளது.
சிறிய நீர் மின் நிலையம் என்பது, 25 மெகா வாட்டிற்கு குறைவாக நிறுவு திறனை உடையது.

