'4வது புதிய முனையமாகிறது வில்லிவாக்கம் ரயில் நிலையம்'
'4வது புதிய முனையமாகிறது வில்லிவாக்கம் ரயில் நிலையம்'
ADDED : பிப் 02, 2024 12:15 AM

சென்னை:''வில்லிவாக்கம் ரயில் நிலையத்தை, சென்னையின் நான்காவது புதிய முனையமாக மாற்றுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது,'' என, தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் கூறினார்.
சென்னையில் அவர் அளித்த பேட்டி:
தெற்கு ரயில்வேயில் புதிய பாதை, அகலப்பாதை, இரட்டை பாதை உட்பட பல்வேறு பணிகளுக்கு, 12,173 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ரயில்வே திட்டங்களுக்கு, சில இடங்களில் நிலம் கையகப்படுத்துவதில் உள்ள சிக்கலை தீர்க்க, மாநில அரசுடன் பேச்சு நடக்கிறது.
தற்போது, தேவையான அளவு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. கூடுதல் ரயில்கள் தேவைப்பட்டால், சிறப்பு ரயில்கள், வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும். சென்னை - கன்னியாகுமரி இரட்டை பாதை பணிகளை, வரும் மார்ச்சில் முடிக்க திட்டமிட்டுள்ளோம்.
பயணியர் தேவை அதிகரித்து வருவதால், ரயில்கள் இயக்கத்திற்கு தற்போதுள்ள ரயில் முனையங்கள் போதாது. எனவே, சென்னையில் நான்காவது ரயில் முனையமாக, வில்லிவாக்கம் ரயில் நிலையத்தை உருவாக்க ஆய்வு செய்து வருகிறோம். சாத்தியக்கூறு ஆய்வு பணிகள் முடித்துள்ளன; நான்கு மாதங்களில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.
ரயில்வே வாரிய ஒப்புதல் கிடைத்த பின், இதற்கான பணிகளை மேற்கொள்வோம். இது தவிர, கிளாம்பாக்கம் ரயில் நிலையம் உருவாக்கும் பணிகள் அடுத்த ஆறு மாதங்களில் முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.

