'மரடோனா இறப்பதற்கு 10 நாட்களுக்கு முன்பு'.... நான்கரை ஆண்டுகளுக்குப் பின் வெளியான பகீர் தகவல்
'மரடோனா இறப்பதற்கு 10 நாட்களுக்கு முன்பு'.... நான்கரை ஆண்டுகளுக்குப் பின் வெளியான பகீர் தகவல்
ADDED : மார் 28, 2025 02:31 PM

பியூனஸ் அயர்ஸ்: பிரபல கால்பந்து ஜாம்பவான் மரடோனா இறப்பில் மர்மம் நீடித்து வரும் நிலையில், நான்கரை ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது மரணம் தொடர்பாக சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
கால்பந்து உலகின் ஜாம்பவானும், அர்ஜென்டினா அணியின் முன்னாள் கேப்டனுமான மரடோனா, சர்வதேச கால்பந்து அரங்கில் தனக்கென்று ஒரு இடத்தை உருவாக்கினார். உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ளார்.
போதை பழக்கத்திற்கு அடிமையான இவர், உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த சூழலில் அவர் கடந்த 2020ம் ஆண்டு மரணமடைந்தார். மூளையில் இரத்தக்கசிவுக்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இரு வாரங்களுக்குப் பிறகு, இதய செயலிழப்பு காரணமாக உயிரிழந்தார்.
மரடோனா மரணத்தில் சர்ச்சைகள் நிலவி வந்த நிலையில், மருத்துவர்களின் அலட்சியத்தால் மரடோனா உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, மரடோனாவின் குடும்ப மருத்துவர் லியோபோல்டோ லுக் உள்பட 7 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில், விசாரணையின் போது, மரடோனா மரணம் தொடர்பாக தடயவியல் மருத்துவர் மவுரிசியோ கேசிநெல்லி அளித்த வாக்குமூலத்தில் சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. அதாவது, 'மரடோனாவின் இதயம் மற்றும் கல்லீரல் செயலிழப்பு காரணமாக, அவர் இறப்பதற்கு 10 நாட்களுக்கு முன்பு நுரையீரலில் நீர் கோர்த்துள்ளது. இதனால், அவர் ரண வேதனையுடன் மரணத்தை எதிர்கொண்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் இதனை கவனித்திருக்க வேண்டும். மேலும், சாதாரண இதயத்தைப் போல இல்லாமல், அவரது இதயம் இருமடங்கு எடை கூடியிருந்தது,' இவ்வாறு அவர் கூறினார். இது மரடோனா ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.