Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/ஸ்பெஷல்/பானுவாசர ஸ்பெஷல்/ முற்போக்கு சிந்தனையை ஊக்கப்படுத்தும் இஞ்சிகேரி மடம்

முற்போக்கு சிந்தனையை ஊக்கப்படுத்தும் இஞ்சிகேரி மடம்

முற்போக்கு சிந்தனையை ஊக்கப்படுத்தும் இஞ்சிகேரி மடம்


ADDED : ஜூலை 06, 2025 06:01 AM

Follow on Google

ADDED : ஜூலை 06, 2025 06:01 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மடாதிபதிகள் மந்திரங்கள் பாராயணம் செய்வது, பஜனை, கீர்த்தனை நடத்துவர். சமுதாயத்தினரின் தவறுகளை திருத்துவர் என்ற கருத்து பரவலாக உள்ளது. பெரும்பாலான மடாதிபதிகள் சமூக சேவைகளுடன், நாட்டுக்கும், சமுதாயத்துக்கும் பங்களிப்பை அளித்துள்ளனர். இத்தகைய மடாதிபதிகளில், இஞ்சிகேரி மடத்தின் மாதவானந்தாவும் ஒருவராவார்.

கர்நாடகா - மஹாராஷ்டிரா எல்லைப்பகுதியின் விஜயபுரா மாவட்டம், இன்டி தாலுகாவில் இஞ்சிகேரி கிராமம் உள்ளது. இங்கு மடம் அமைந்துள்ளது. இந்தியாவில் உள்ள புராதன மடங்களில், இதுவும் ஒன்றாகும். மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இந்த மடத்தை 200 ஆண்டுகளுக்கு முன், குருலிங்க ஜங்கம மஹாராஜர் உருவாக்கினார். ஜாதி, மதம் சார்பற்ற மடமாக உருவாக்கிய பெருமை, மாதவானந்த சுவாமிகளை சாரும்.

கலப்பு திருமணங்கள்


இவர் சிறு வயதிலேயே தீட்சை பெற்று கொண்டார். தன் முற்போக்கு சிந்தனைகள், புரட்சிகரமான செயல்கள் மூலம், மடத்தின் செல்வாக்கை உயர்த்தினார். சமுதாய மேம்பாட்டை கொண்டு வந்தார். கடந்த 50 ஆண்டுகளாக கலப்பு திருமணங்களை ஏற்பாடு செய்து வருகிறார். இலவசமாக கலப்பு திருமணங்களை நடத்துவதால், ஏழைகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும். முதன் முறையாக 1974ல் மடத்தில் கலப்பு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது 10 ஜோடிகள் திருமணம் செய்து கொண்டனர்.

வெவ்வேறு ஜாதி, மதங்களை சேர்ந்தவர்களுக்கு திருமணம் செய்வது, எளிதான விஷயமல்ல. ஜாதி வேற்றுமை, தீண்டாமை அதிகம் இருந்த அந்த காலத்தில், இத்தகைய திருமணங்களை வெற்றிகரமாக நடத்தினார். மற்ற மடங்களை விட, மாறுபட்ட மடமாக, முன் மாதிரியாக விளங்குகிறது.

இது தொடர்பாக, மடத்தின் ஒருங்கிணைப்பாளர் முகுந்த் களகளி கூறியதாவது:

மடாதிபதி மாதவானந்த சுவாமிகள், 12ம் நுாற்றாண்டில் வாழ்ந்த பசவண்ணரின் கொள்கைகள், தத்துவங்களை பின்பற்றுகிறார். ஜாதி, மதம் சார்பற்ற மடமாக செயல்படுகிறது. சுவாமிகள் தேர்வு செய்யும் பெண்களை, சீடர்கள் தங்களின் வாழ்க்கை துணையாக ஏற்று கொள்கின்றனர். இதுவரை யாரும், இது பற்றி கேள்வி எழுப்பியது இல்லை.

50 ஆண்டு நிறைவு


மணமக்களும் தயக்கம் இன்றி, கலப்பு திருமணம் செய்து கொள்கின்றனர். கலப்பு திருமண சம்பிரதாயத்தை துவங்கி, 50 ஆண்டுகள் நிறைவடைந்தன. இதை சிறப்பிக்கும் வகையில். நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

மாதவானந்த சுவாமிகள், ஆன்மிகவாதி மட்டுமல்ல, சுதந்திர போராளியாகவும் இருந்தவர். இந்திய சுதந்திர போராட்டம் உச்சத்தில் இருந்த போது, ஆங்கிலேயரை எதிர்த்து போராட, மாதவானந்த சுவாமிகள் மக்களை ஒன்று திரட்டினார். அன்றைய பிஜாப்பூர் மாவட்டத்தில், ஆயுத கிடங்கு மற்றும் துப்பாக்கி தயாரிக்கும் தொழிற்சாலையை துவக்கினார். இந்த தொழிற் சாலையில் நாட்டு வெடிகுண்டுகளும் தயாரிக்கப்பட்டன.

சுதந்திர போராட்டம் நடந்த போது, மக்கள் பல்வேறு போலீஸ் நிலையங்களில் தாக்குதல் நடத்தி, ஆயுதங்கள், துப்பாக்கி குண்டுகளை கொண்டு சென்றனர். கர்நாடகா ஒருங்கிணைந்ததில் சுவாமிகளின் பங்களிப்பு மிகவும் அதிகம்.

அமைதியான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி, கன்னட பகுதிகளை ஒன்று சேர்க்க, 21 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். அவரது முயற்சியால் ஜமகன்டி, ராமதுர்கா, மைசூரு உட்பட பல பகுதிகள் கர்நாடகாவில் இணைய காரணமாக இருந்தது.

எங்களின் மடம் அன்னதானம், கூட்டு விவசாயம் போன்ற நல்ல விஷயங்களை ஊக்கப்படுத்துகிறது. இது ஏழைகளை முன்னேற்ற வழி வகுக்கும்.

சட்ட உதவி


கடந்த 1980ல் மாதவானந்த சுவாமிகள் மறைவுக்கு பின்னும், அவரது பாதையில் மடத்தை முன்னடத்தி செல்கிறோம். இலவச கூட்டு திருமணங்கள், கலப்பு திருமணங்களை நடத்துகிறோம். குடும்ப வாழ்க்கையில் பிரச்னையை சந்திக்கும் தம்பதியருக்கு உதவுகிறோம். கலப்பு திருமணங்கள் செய்து கொண்டவர்களுக்கு பொருளாதார உதவி, சட்ட உதவிகளும் செய்யப்படுகிறது.

மடங்கள் சமுதாயத்தில், பல மாற்றங்களை கொண்டு வரலாம். இதன் மூலம் மக்களை முன்னேற்ற முடியும் என்பதற்கு, இஞ்சிகிரி மடம் சாட்சியாக உள்ளது. ஜாதி, மதம் அடிப்படையில் பிரிவினைகள் நாட்டை வதைக்கிறது. இத்தகைய நேரத்தில் எங்கள் மடம் அன்பு, சகோதரத்துவத்தை பரப்புகிறது.

இவ்வாறு அவர் கூறினார்

- நமது நிருபர் -.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap