/
ஸ்பெஷல்
/
பானுவாசர ஸ்பெஷல்
/
தாய்லாந்தில் கதக் நடனமாட செல்லும் கர்நாடக மாணவி
/
தாய்லாந்தில் கதக் நடனமாட செல்லும் கர்நாடக மாணவி
ADDED : ஜூன் 16, 2025 07:13 AM

தார்வாடின் ஆரோஹி சதாசிவா ஹைஹொள்ளி, கதக் நடனத்தில் சிறந்து விளங்குகிறார். கர்நாடகாவின் பெருமையை உலகம் முழுதும் பரப்பியுள்ளார். வரும் அக்டோபரில் தாய்லாந்தில் நடக்கவுள்ள நடன நிகழ்ச்சியில், இந்தியா சார்பில் இவர் பங்கேற்கிறார்.
தார்வாடை சேர்ந்தவர் ஆரோஹி சதாசிவா, 17. ஸ்ரீ சத்ய சாய் பி.யு.சி., கல்லுாரியில், வர்த்தக பிரிவில் இரண்டாம் ஆண்டு படிக்கிறார். படிப்பில் மட்டுமின்றி, கதக் நடனத்திலும் இவருக்கு ஆர்வம் அதிகம். கடந்த 11 ஆண்டுகளாக, சாந்தலா நாட்டியாலயாவில், விதுஷி வர்னேகரிடம் கதக் நடனம் கற்று வருகிறார்.
இவரது கலைத் திறனுக்கு, பெற்றோரும், நடன குருவும் ஊக்கம் அளிக்கின்றனர். இதனால் தன் கனவுகளை ஆரோஹி நனவாக்குகிறார். யுனெஸ்கோ ஒருங்கிணைப்பில், அனைத்திந்திய கலாசார சங்கம், சமீபத்தில் மஹாராஷ்டிராவின் புனேவில், கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இதில் இவரும் பங்கேற்று கதக் நடனமாடி, அனைவரையும் கவர்ந்தார். இந்த நிகழ்ச்சியில் அவர் இரண்டாம் பரிசு வென்றார்.
வரும் அக்டோபர் 25 முதல் 29 வரை, தாய்லாந்தின் பட்டாயாவின், புராபா பல்கலைக்கழக கலை அரங்கில், 15வது கல்சுரல் ஒலிம்பியாட் பார் ஆர்ட் அண்ட் கல்ச்சர் சர்வேதேச மாநாடு நடக்கவுள்ளது. இதில் இந்தியா சார்பில், ஆரோஹி சதாசிவா பங்கேற்கவுள்ளார். கதக் நடனத்தில் தன் திறமையை வெளிப்படுத்துவார்.
இந்த அரிய வாய்ப்பு, இவரது கலை வாழ்க்கையில், ஒரு மைல் கல்லாக இருக்கும். இந்திய கலை மற்றும் கலாசாரத்தை, உலக அளவில் கொண்டு செல்லும், பொன்னான வாய்ப்பு கிடைத்துள்ளது.
தேசிய அளவிலான நடன தேர்வுகளில் பங்கேற்று, முதல் இடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார். தன் கலைக்காக கல்வியை மறக்கவில்லை. கல்வி மற்றும் கலை என, இரண்டிலும் சிறந்து விளங்குகிறார். இவரது தந்தை சதாசிவாவும், சிறந்த பாடகர். ஆரோஹி நடனம் மட்டுமின்றி, சங்கீதத்திலும் திறன் கொண்டவர். வரும் நாட்களில் தன் திறனை, மேலும் வளர்த்து கொள்ள வேண்டும், உலக அளவில் சாதனை செய்ய வேண்டும் என்பது, இவரது கனவாகும். இதை நிறைவேற்றி கொள்ள, தன்னை தயார்படுத்தி கொள்கிறார்.
- நமது நிருபர் -