/
ஸ்பெஷல்
/
பானுவாசர ஸ்பெஷல்
/
கால் போனாலும் தன்னம்பிக்கையை இழக்காத லோகேஷ்
/
கால் போனாலும் தன்னம்பிக்கையை இழக்காத லோகேஷ்
ADDED : அக் 18, 2025 11:04 PM

மனதில் உறுதியும், விடா முயற்சியும் இருந்தால், சாதனை செய்ய உடல் ஊனமோ, வயதோ தடையே அல்ல என்பதற்கு உதாரணமாக பலர் வாழ்வதை, நாம் காண்கிறோம். இவர்களில் லோகேஷும் ஒருவர். கால்களை இழந்தாலும், தன்னம்பிக்கையை இழக்கவில்லை.
பொதுவாக மாற்றுத்திறனாளிகள் மற்றவரை சார்ந்தே வாழ்வர். ஆனால் லோகேஷ் யாருக்கும் சுமையாக இல்லாமல், தன் கையே தனக்கு உதவி என்று வாழ்கிறார்.
சித்ரதுர்கா மாவட்டம், செல்லகெரே நகரில் வசிப்பவர் லோகேஷ், 55. இவரு க்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் கால் முறிந்தது. சிகிச்சைக்கு பின்னரும் நடமாட முடியவில்லை. வாழ்க்கை நடத்த என்ன செய்வது என, தெரியவில் லை. அதற்காக அவர் மனம் தளரவில்லை.
மற்றவரின் தயவில் வாழ, அவருக்கு விருப்பம் இல்லை. உழைத்து பிழைப்பது அவரது எண்ணமாக இருந்தது. எனவே செல்லகெரே எம்.எல்.ஏ., ரகுமூர்த்தியை சந்தித்து, தனக்கு மூன்று சக்கர வாகனம் வழங்க வேண்டும் என, வேண்டுகோள் விடுத்தார். அவரும் மாற்றுத்திறனாளிகள் நிதியில், மூன்று சக்கர வாகனம் வாங்கிக் கொடுத்தார். இந்த வாகனத்தை நடமாடும் கடையாக மாற்றி, வீதி வீதியாக சென்று சாக்லேட், சிப்ஸ், இனிப்பு பண்டங்கள் உட்பட பல்வேறு பொருட்களை விற்கிறார். அவரை ஊக்கப்படுத்தும் வகையில், பொது மக்களும் பொருட்களை வாங்குகின்றனர்.
தினமும் 500 முதல் 1,000 ரூபாய் வரை சம்பாதித்து, நிம்மதியாக வாழ்க்கை நடத்துகிறார்.
தனக்கு கால் போனாலும், தன்னம்பிக்கையை இழக்காமல் பிழைப்புக்கு புதிய வழியை அமைத்து கொண்டு, தன்மானத்துடன் லோகேஷ் வாழ்கிறார். இவரது வாழ்க்கை மற்றவருக்கு முன் மாதிரியாக அமைந்துள்ளது
- நமது நிருபர் - .

