மின்னல் தாக்கி காளியம்மன் கோவில் கோபுர கலசம் சேதம் பக்தர்கள் அதிர்ச்சி
கடலுார்: காளியம்மன் கோவில் கோபுர கலசம் மின்னல் தாக்கி சேதமதடைந்ததால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
கடலுார், புதுப்பாளையத்தில் தரைகாத்த காளியம்மன் கோவில் உள்ளது. இங்கு, வெள்ளிக் கிழமை மற்றும் ஞாயிற்று கிழமைகளில் ராகு கால பூஜையின் போது, ஏராளமான பக்தர்கள் விளக்கேற்றி வழிபடுவது வழக்கம். அதன்படி, இன்று காலை 10:30 மணி முதல், 12:00 மணி வரை வழக்கம் போல் ராகு கால பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் விளக்கேற்றி வழிபாடு செய்து கொண்டிருந்தனர். இந்நிலையில், 11:30 மணிக்கு பலத்த இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. அப்போது, திடீரென கோபுர கலசத்தின் மீது மின்னல் தாக்கியது. இதில், கோபுர கலசம் சேதமாகி அடியோடு பெயர்ந்து கீழே விழுந்தது. திடீரென கோவில் வளாகத்தில் பயங்கர சத்தம் கேட்டதால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். மின்னல் தாக்கி கலசம் சேதமடைந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.