மக்கள் மனதை புண்படுத்தாவிட்டால் த.வெ.க., ஆட்சி நீடிக்கும்: ராமானுஜ ஜீயர்
சிவகாசி: ‘‘மக்கள் மனதை புண்படுத்தாமல் ஆட்சி செய்தால், த.வெ.க., அரசு நீடிக்கும் ’’என ஸ்ரீவில்லிபுத்துார் சடகோப ராமானுஜ ஜீயர் கூறினார். சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என சட்டசபையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியை கண்டித்து, சிவகாசியில், விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், ஸ்ரீவில்லிபுத்துார் மணவாள மாமுனிகள் மடத்தின் பீடாதிபதி சடகோப ராமானுஜ ஜீயர் பங்கேற்றார்.
அவர் கூறியதாவது: தமிழக அரசியல் வேறு, மதங்கள் வேறு என்பதை புரிந்து கொண்டு, மக்கள் மனது புண்படும்படி நடந்து கொள்ளக் கூடாது என்ற கோரிக்கையை, முதல்வர் விஜய் முன் வைக்கிறோம். மக்கள் மனது புண்படும்படி, யார் நடந்து கொண்டாலும், அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். மக்கள் மனது புண்படும்படி பேசி, விரோத தன்மையை வளர்த்தது தமிழக அரசியல் கட்சிகள் தான். தற்போதைய, தமிழக அரசு எந்த ஒரு மதத்தையும், எந்த கடவுளையும் இழிவாக பேசக்கூடாது. முன்பெல்லாம் அமைதியாயிருந்த மக்கள் தற்போது விழிப்புணர்வோடு உள்ளனர். மக்களிடையே கலவரத்தை துாண்டாமல், பிரச்னையின்றி, மனதை புண்படுத்தாமல் ஆட்சி செய்தால், முதல்வர் விஜயின் த.வெ.க., அரசு நீடிக்கும். இந்த அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற, ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாளிடம் பிரார்த்தனை செய்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.